காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்


பாஜகவில் வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக இருந்தவர் காயத்ரி ரகுராம். நடிகை, நடன இயக்குனராக இருந்த இவர் பாஜகவில் இணைந்து அரசியலில் செயல்பட்டு வருகிறார்.


இந்நிலையில், கட்சிக்கு களங்கம் விளைவித்து வந்ததால் பா.ஜ.க.வில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து  அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். காயத்ரி ரகுராம், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்லபடுவதாக கூறி, கட்சி தலைமைக்கு பலர் கடிதங்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு காயத்ரி ரகுராமுக்கு கட்சி தலைமை கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் இதுகுறித்து எந்த விளக்கமளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 


அண்ணாலை கூறியது என்ன?


தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


 ”மன அழுதத்தை ஏற்படுத்தியுள்ளது”


இது தொடர்பாக காயத்ரி ரகுராம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கட்சிக்கு களங்கம் எனக்கூறி சஸ்பெண்ட் செய்தது மன அழுதத்தை ஏற்படுத்தியுள்ளது . புகார் தொடர்பாக விளக்கமளிக்க நேரம் அளிக்காமல் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன்" என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தன்னிடம் எந்தவித விசாரணையும் நடத்தாமல் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


மேலும் அவர் கூறியதாவது, " கட்சி சார்பாக நான் நல்லதை தான் செய்திருக்கிறேன். கடந்த 8 ஆண்டுகளாக கடன் வாங்கி பலருக்கு உதவி  செய்து இருக்கிறேன். இந்தநிலையில், நான் பாஜகவிற்கு களங்கம் விளைவித்ததாக கூறுவது மிகவும் வருதம் அளிக்கிறது. என்னோடு தரப்பில் இருந்து எந்த வித கருத்தையும் கேட்காமல் என்னை சஸ்பெண்ட் செய்தனர். எந்த ஒரு தவறும் செய்யாமல் தண்டனை கிடைத்தால் எல்லோருக்கும் வருத்தம் இருக்கும். கொலை, மோசடி செய்பவர்களை கூட இரண்டு தரப்பு விசாரணை செய்து தான் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும்.  அத்ந நியாயம் எங்களுக்கு கிடைக்கவில்லை" என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.


மேலும் இதுகுறித்து காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ”பதவி நீக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.






ஆனால் என்னை நேசிக்கிறவர்கள் என்னுடன் பேசுவார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது. நான் இடைநீக்கத்துடன் தேசத்திற்காக பணியாற்றுவேன்" என தெரிவித்துள்ளார்.