கொரோனாவில் மகாராஷ்டிரா போல தமிழ்நாடு முதலிடத்தில் இருக்க வேண்டும் என தமிழக பாஜகவினர் விரும்புகிறார்கள் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சந்தித்தார். அப்போது, நீட் தேர்வில் விலக்கு, கூடுதல் கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட கோரிக்கைகள் அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பின்போது, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார்.


இதன்பிறகு மத்திய அமைச்சரிடம் பேசியது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு பாரட்டியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான தேவைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினேன். செங்கல்பட்டு, குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையங்களை திறக்க பேசி முடிவெடுக்கலாம் என்றார்கள். புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையங்கள் அமைப்பது தொடர்பாகவும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  1.4 கோடி தடுப்பூசி இந்த மாதம் தமிழ்நாடு வருகிறது. மேலும்  2 கோடி தடுப்பூசி கேட்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் 95 சதவீதம் ஆசியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கேரள மாநில எல்லையையொட்டிய மாவட்டங்களில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை அனுமதி வழங்க கோரிக்கை வைத்தோம்” என்றார்.


மேலும்,  “விநாயகர் சதூர்த்திக்கு அனுமதி கேட்கும் பாஜகவினர், கர்நாடக பாஜக அரசு என்ன செய்கிறது என சொல்லட்டும். மகாராஷ்டிராவில் கொடுத்தது போல் அனுமதி வேண்டும் என தமிழ்நாடு பாஜகவினர் கேட்கிறார்கள். கொரோனாவில் மகாராஷ்டிரா போல தமிழ்நாடு முதலிடத்தில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்” என்றும் கூறினார்.




முன்னதாக, அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையால்,  தமிழ்நாட்டில் வருகிற 15.09.2021 வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு கூடுதல் தடைகளை தமிழ்நாடு அரசு விதித்தது. 


இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்,   "தமிழ்நாட்டில் தற்போது வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற தேவையான கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாநில  அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும், தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைக் கொண்டாட்டங்களின்போது மக்கள் அதிக அளவில் கூடி அதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையிலும், தமிழ்நாட்டில் வருகிற 15.09.2021 வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது:


தற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதசார்பான ஊர்வலங்கள். திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும்  தடை விதிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில்  விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று, சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமய விழாக்களை பொது மக்கள் தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . 


விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்க தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து அனுமதிக்கப்படுகிறது. தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில்  சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.  சென்னையைப் பொருத்தவரை. கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் இச்செயல்பாட்டிற்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட, அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடைசெய்யப்படுகிறது. தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின்    வெளிப்புறத்திலோ/சுற்றுப்புறத்திலோ வைத்துச்  செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தற்போது, நடைமுறையில் உள்ள சமூக  இடைவெளியினைக் கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும்  என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை எவ்வகையிலேனும் மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


இந்த விழாவிற்கான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்குச் செல்லும் பொது மக்கள் தவறாது முகக்கவசம் அணிவதோடு. அவ்விடங்களில் பொருட்கள் வாங்க நிற்கும் போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


சென்னை, வேளாங்கண்ணி,நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும்  இதர இடங்களில் கிறித்தவ சமயத்தாரால்
கொண்டாடப்படவுள்ள மரியன்னையின் பிறந்தநாள்  திருவிழாவின்போது, பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.


மேற்காணும் வழிமுறைகளைப் பொது மக்கள் தவறாது கடைபிடிக்குமாறும், இவ்விழாக் கொண்டாட்டங்களின் போது,  பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.