தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலை முதல என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


என்.ஐ.ஏ சோதனை:


நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோன்று, தஞ்சை, மதுரை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சையில் நடராஜபுரம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த பக்ருதீன் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் உசிலங்குளத்தில் பிஎஃப்ஐ முன்னாள் நிர்வாகி ரஷித் முகமது வீட்டிலும் சோதனை தொடர்கிறது. திருச்ச் மண்டல பிஎஃப்ஐ நிர்வாகியாக இருந்த நிலையில் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் உசிலம்பட்டி மற்றும் பேரையூர் பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.   கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ராமலிங்கம் கொலை வழக்கு:


கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மதமாற்ற பரப்புரையை தடுத்ததாக கூறி 2019-ல் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். பாமகவில் நகராட்சி அளவிலான நிர்வாகியாக இருந்த இவர், இந்து முன்னணி பிரமுகராகவும் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவர் மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்ட  ராமலிங்கத்தின் கொலை தொடர்பாக, திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து. 11 பேரை கைது செய்திருந்தனர். இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் சலசலப்பை ஏற்படுத்தின. கொலையை கண்டித்து கடையடைப்பு நடந்ததால், பிரச்னை பெரிதானது. 


என்.ஐ.ஏ. விசாரணை தொடக்கம்:


தொடர்ந்து, காவல்துறை விசாரணை நடைபெற்று வந்த நிலையிலேயே 2019ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்புக்கு ராமலிங்கம் கொலை வழக்கு மாற்றப்பட்டது. இதனிடையே நெல்லை மாவட்டம் தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அகமது சாலிக் என்பவரை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் அதே ஆண்டு ஜீன் மாதம் 27ம் தேதி கைது செய்தனர்.


தொடர்ந்து 03.07.2019 அன்று தென்காசியில் உள்ள அகமது சாலிக்கின் வீட்டில் தேசிய புலனாய்வு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான விவரங்கள் எதையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.  சோதனை நடந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதோடு, மக்கள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் உடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ராமலிங்கம் கொலை தொடர்பான கொலை வழக்கில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.