'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்றார் வள்ளலார். 


'தனி ஒருவனுக்கு உணவு இல்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!' என்றான் பாரதி. 


'பிச்சை எடுத்தாவது கற்று விடுங்கள்' என்றார் ஒளவை. 


'கல்வி யாராலும் அழிக்கவோ, திருடவோ முடியாத செல்வம்' என்றார் திருவள்ளுவர்.


’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே..’ என்றது மணிமேகலை..


கல்வி கற்பதற்காக மாணவர்களை வரவைக்க, 1920-ல் நீதிக்கட்சியால் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இலவசக் காலை உணவு திட்டமாக விரிவுபடுத்தி உள்ளது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. 


பின்னணி என்ன?


படிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, உணவுக்காகவது குழந்தைகள் பள்ளிக்கு வரட்டும் என்று கடும் நிதி நெருக்கடிக்கு இடையிலும் பள்ளிகளில் உணவு கொடுத்தார் படிக்காத மேதை காமராசர். மத்திய அரசின் உதவியுடன், கொடுக்கும் உணவை சத்தாக வழங்கினார் எம்ஜிஆர். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் 1982ஆம் ஆண்டு கிராமப்புற பகுதிகளில் 2 முதல் 9 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டும் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1984 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.


அவருக்குப் பின்னர் வந்த கலைஞர் கருணாநிதி சத்துணவுடன் குழந்தைகளுக்கு அவித்த முட்டையையும் முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழத்தையும் கொடுத்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை ஆரம்பித்து, உணவும் தானியங்களும் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்தார். சத்துணவுடன் காய்கறிகளையும் சேர்த்து வழங்கினார் ஜெயலலிதா. எனினும் இவை அனைத்துமே மதிய உணவுத் திட்டமாக மட்டுமே தொடர்ந்தன. 




தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் காலை உணவு


இதற்கிடையே கடந்த  2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட சில இடங்களில் உள்ள பள்ளிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு, தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்த சூழலில், காலையில் பள்ளிக்கு வரும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சத்தான ஊட்டச்சத்துடன் கூடிய சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.


சத்துணவுத் திட்டம் உணவை மட்டும்தான் கொடுத்ததா?


இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய சத்துணவு அளித்து, விளிம்பு நிலைக் குழந்தைகள் தடையின்றிப் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தது. குழந்தைகளுக்கு உணவு அளிக்கப் பணம் வேண்டுமே என்ற கவலையில் இருந்து பெற்றோரை விடுவித்தது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தியது.


அரசே தனது மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளித்தது. இது, மக்களின் வறுமையை மட்டும் ஒழிக்காமல் உணவு என்னும் காரணி மூலம் சமுதாயத்தில் ஊடுருவியிருந்த அதிகாரத்தையும் ஒழித்தது. இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், 'மாணவர்களுக்குக் காலை உணவு' என்ற அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 


முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் (Free Breakfast Scheme), அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பள்ளிகளில் தொடங்கப்பட்டது. 1 - 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை, முதலமைச்சர் மதுரையில் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்தத் திட்டம்  செயல்படுத்தப்பட்டது. 






சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்பட உள்ள உணவுகள் 


* திங்கட்கிழமை - உப்புமா வகை ( ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார்)
* செவ்வாய்க்கிழமை - கிச்சடி வகை ( ரவா, சேமியா, சோள காய்கறி, கோதுமை ரவா கிச்சடி)
* புதன்கிழமை - பொங்கல் (வெண் பொங்கல், ரவா பொங்கல் உடன் காய்கறி சாம்பார்)
* வியாழக்கிழமை - உப்புமா வகை ( ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார்)
* வெள்ளிக்கிழமை - ஏதாவது ஒரு வகை கிச்சடி(ரவா, சேமியா, சோள காய்கறி, கோதுமை ரவா கிச்சடி) உடன் ரவா கேசரி, சேமியா கேசரி 


இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டு வந்தது. மேலும் இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.


 


மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம்


இந்த நிலையில், மாநிலம் முழுவதும் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவுத் திட்டம் இன்று அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. 31,008 பள்ளிகளில்‌ பயிலும்‌ 17 லட்சம்‌ மாணவர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ரூ.404.41 கோடி செலவில்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதை திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளியில்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ இன்று தொடங்கி வைத்தார்.


காலைச் சிற்றுண்டி ஏன் அவசியம்?


*  முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியின்கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 


* குழந்தைகள் உண்ணத் துரித உணவு, ஊட்டச்சத்து குறைவான உணவு என்றில்லாமல், சத்தான, தரமான உணவு வழங்கப்பட உள்ளது.


* அவசர கதியில் தயாரிக்கப்படும் உணவைக் காட்டிலும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு இத்திட்டத்தில் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு தவிர்க்கப்படும். 


* இந்தத் திட்டத்தின் மூலம் உணவில் சமத்துவம் பேணப்படுகிறது. மாணவர்கள் உடுத்தும் சீருடையைப் போல, உண்ணும் உணவிலும் சமத்துவம் உறுதி செய்யப்படுகிறது. 


* இரவு உணவை அடுத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாம் அனைவரும் எடுத்துக்கொள்வது காலை உணவு. அதைக் கட்டாயம் தவிர்க்கக்கூடாது. அரசின் காலை சிற்றுண்டித் திட்டம், குழந்தைகள் அனைவரும் காலை உணவு எடுத்துக்கொள்வதை உறுதி செய்கிறது.


* இது வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளின் மன நலத்தைப் பாதுகாத்து, அவர்களைக் கற்றலில் கவனம் செலுத்தச் செய்கிறது.






'கவலைப்படாம வேலைக்குப் போக முடியும்'


இதுகுறித்து அஸ்தினாபுரம் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி சங்கரியின் தாய் அங்காளம்மாள் கூறும்போது, ''எனக்கு 4 பொம்பளப் பசங்க, ஒரு பையன். தினமும் 100 நாள் கூலி வேலைக்குப் போறேன். காலைல கிளம்பிப் போனா வர நைட்டாகிடும். வந்தபிறகு உடம்பு வலி பயங்கரமா இருக்கும். சிரமப்பட்டு சாப்பாடு செஞ்சு வைச்சிட்டு, சரியா சாப்பிடாமக்கூட தூங்கிடுவேன். 


காலைல எழுந்தா அங்க கிளம்பதான் நேரம் சரியா இருக்கும். பாப்பா சாப்பிட மாட்டான்னு நினைச்சு சில நாட்கள் சமைச்சு வைப்பேன். சில நாள் முடியாது. இனி அப்படி பண்ண வேண்டியதில்லை. அரசே உணவு கொடுக்கறதால இனி கவலைப்படாம வேலைக்குப் போக முடியும். 


வேலை இல்லாத காலத்துல சாப்பாட்டுக்குக் கஷ்டம் ஆகிடும். அப்போ நேரம் இருந்தாலும், மளிகை வாங்கக் கையில் காசு இருக்காது'' என்கிறார். 




'சாப்பிட்டுட்டு தெம்பா படிப்பேன்'


மாணவி சங்கரி கூறும்போது, ''அப்பா இல்லை. அம்மாதான் வேலைக்குப் போய் எங்களைப் பார்த்துக்கறாங்க. அவங்க கஷ்டப்படறதைப் பார்த்துட்டு, நிறைய நாள் சாப்பாடு செய்ய வேணாம்னு அம்மாகிட்ட சொல்லிட்டு, சாப்பிடாமயே ஸ்கூல் வந்துருக்கேன். கிளாஸ்ல நிறைய நாள் மயக்கம் வந்துருக்கு. என்னன்னு மத்தவங்க கேட்கும்போது உண்மையை சொல்லக் கூச்சப்பட்டு உடம்பு சரியில்லைன்னு சொல்லி இருக்கேன். இனி அந்தப் பிரச்சினை இருக்காது. ஸ்கூலுக்கு வந்து சாப்பிட்டுட்டு தெம்பா படிப்பேன்'' என்கிறார் சங்கரி. 


அரசு வழங்கிய மதிய உணவை மட்டுமே அடிப்படையாக வைத்து, பள்ளிப் படிப்பை முடித்து சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்போர் பலர். அந்த வகையில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமையப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.