தன்னிடம் மன்னிப்பு கடிதம் பெற்று அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி சேர்க்கவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் அதிமுக அல்லது திமுகவில் இணையவுள்ளார் என்று கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. ஓபிஎஸ் ஆதரவாளர்களான பெங்களூர் புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் ஓபிஎஸ் -யிடம் விலகி சிலர் திமுகவில் இணைந்தனர். இவர்களை போல வைத்திலிங்கமும் திமுக அல்லது அதிமுகவில் இணைவார் என்று அரசியலில் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்தன. தற்போது, அதற்கு மறுப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வைத்திலிங்கம் அறிக்கை
”இந்த உலகத்தில் உண்மை பேசுவதை விட உயர்ந்தது வேறொன்றுமில்லை" என்கிறார் வள்ளுவர். வள்ளுவரின் வாய்மொழிக்கு முற்றிலும் முரணான வகையில், 'உண்மையின் உரைகல்' என்று சொல்லிக் கொண்டு, என்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற, விஷமத்தனமான செய்தியை தனியார் செய்தி நாளிதழ் "மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய பேச்சு வைத்திலிங்கத்துக்கு பழனிசாமி பச்சைக்கொடி" என்ற தலைப்பில் இன்று வெளியிட்டுள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கும் என்னை தி.மு.க.வில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர விரும்புவதாகவும், அனைதிந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேருவதை திரு. எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்றும், எனவே என்னிடமிருந்து மன்னிப்புக் கடிதம் பெற்று என்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்க்கும் பொறுப்பை திரு. எடப்பாடி பழனிசாமி முன்னாள் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டதாகவும் இன்று தனியார் செய்தி நாளிதழில் செய்தி வந்துள்ளது. இதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதையும், என்னுடைய அரசியல் நோக்கம் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மீட்டெடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதுதான் என்பதையும் தனியார் செய்தி நாளிதழுக்கு இந்த அறிக்கையின்மூலம் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், சில நாட்களுக்கு முன்பு எனக்கு மூளையில் ஏற்பட்ட சிறு அடைப்பு காரணமாக பக்கவாதத்தால் நான் பாதிக்கப்பட்டு, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நான் நலம் பெற்று திரும்பியதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவேன் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும், நான் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை என்பதையும், நான் பூரண நலத்துடன் இருந்து வருகிறேன் என்பதையும் அந்த நாளிதழுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற செய்தி மிகவும் தவறானது என்பதை நாளிதழுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இனி வருங்காலங்களில், இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.