உள்துறைச் செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட அமுதா ஐ.ஏ.எஸ்க்கு, ’முதல்வரின் முகவரி’ திட்ட சிறப்பு அதிகாரி, ’மக்களுடன் முதல்வர்’ திட்ட சிறப்பு அதிகாரி ஆகிய கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 


தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அண்மையில் பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது.  அதன்படி தமிழ்நாடு உள்துறைச் செயலராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலராக நியமனம் செய்யப்பட்டார். முன்னதாக ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலராக அமுதா இருந்தார்.


யார் இந்த அமுதா ஐஏஎஸ்?


சுதந்திரப் போராட்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அமுதா ஐஏஎஸ், தன் சிறு வயது முதலே ஐஏஎஸ் கனவுடன் வளர்ந்தவர். முழு மூச்சாகப் படித்து 1994ஆம் ஆண்டு ஐஏஎஸ் பதவியை வசமாக்கிய அமுதா, கடலூர் துணை ஆட்சியராகத் தன் பணியைத் தொடங்கினார். 


தொடர்ந்து திண்டுக்கல், தருமபுரி  ஆட்சியர்,  உணவு பாதுகாப்புத்துறை முதன்மை செயலர், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநர் எனப் பயணித்து பிரதமர் அலுவலக இணைச் செயலர் வரை பல்வேறு துறைகளில் பணியாற்றினார்.


கருணாநிதி, ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர்


2015ஆம் ஆண்டு சென்னை பெரு வெள்ள பாதிப்பின்போது சிறப்பாகச் செயல்பட்ட அமுதா ஐஏஎஸ் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டக் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். செங்கல்பட்டு மணல் கொள்ளை கும்பல்களுக்கு எதிராக துணிச்சலாக நடவடிக்கை மேற்கொண்ட அவர், பல லாரிகளைப் பறிமுதல் பாராட்டுகளை அள்ளினார்.


இதற்கிடையே ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக அமுதா நியமிக்கப்பட்ட நிலையில், துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கும், அமுதாவுக்கும் மோதல் வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அவர் மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது. எனினும் யாருமே எதிர்பாராத விதமாக, உள்துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். 


இதற்கிடையே கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, அரசியல் பிரமுகர்கள் கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் உள்துறை சரியாகச் செயல்படவில்லை என்று புகார் எழுந்தது. தொடர்ந்து உள்துறைச் செயலராக இருந்த அமுதா மாற்றப்பட்டார். 


மக்கள் குறை தீர் திட்டங்களின் அதிகாரி


எனினும் தற்போது அமுதா ஐ.ஏ.எஸ்க்கு, ’முதல்வரின் முகவரி’ திட்ட சிறப்பு அதிகாரி, ’மக்களுடன் முதல்வர்’ திட்ட சிறப்பு அதிகாரி ஆகிய கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் குறை தீர்க்கும் பிற திட்டங்களுக்கும் அமுதாவே சிறப்பு அதிகாரியாகத் தொடர்வார் என்றும் அரசு தெரிவித்துள்ளது.