தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். சினிமா துறையிலும் அரசியலிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு மக்கள் மனதில் அழியாத தடமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


ராகுல் காந்தி இரங்கல்: 






இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், “தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


நிர்மலா சீதாராமன் இரங்கல்: 






மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் பதிவில், “ மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்: 






காங்கிரஸ் தலைவர் மலிகார்ஜுன கார்கே தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “ தேமுதிக நிறுவனரும், தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் மறைவு எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஒரு சிறந்த நடிகரும், மக்களால் பெரிதும் போற்றப்பட்ட ஒரு தலைவரும், தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் அதிகாரத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி லேசான காய்ச்சல், சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இன்று காலை தேமுதிக தரப்பில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காலை 9 மணி அளவில் மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் விஜயகாந்திற்கு நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் மருத்துவர்களின் தொடர் முயற்சி இருந்த போதிலும் இன்று காலை சிகிச்சை பல்னின்றி உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.