தமிழகத்தின் முதல் இளம் முதல்வர், 2ஆவது பெண் முதல்வர், மாநில வரலாற்றிலேயே அதிக முறை (6 தடவை) முதல்வராக இருந்தவர் ஜெ. ஜெயலலிதா. அவரின் 75ஆவது பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 24) கொண்டாடப்படுகிறது. 




திரைப்பட நடிகையாக இருந்தவர் அரசியலில் பெறும் மாற்றத்தை கொண்டு வந்தார். இவர் 1965ல் ஶ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' எனும் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எம்.ஜி.ஆர் உடன் 28 திரைப்படங்களும், சிவாஜி கணேசனுடன் 17 திரைப்படங்களும் நடித்து, தனது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றார். திரைத்துறையில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர்.


நடிப்பு மட்டுமல்லாமல் பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம், மணிப்புரி, கதக் உள்ளிட்ட பல்வேறு நடனங்களில் முறையான பயிற்சி பெற்றவர்.

எம்ஜிஆர் துவங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து தனது அரசியல் வாழ்வை துவங்கினார் ஜெயலலிதா. 1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1987ல் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர், 1989ல் அஇஅதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்று, தமிழக சட்டசபையில் முதல்முறையாக எதிர்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.




1991-இல், தனது 43-ஆவது வயதில் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். இவர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்த சமயத்தில் லாட்டரி சீட்டுகள், மதுவிலக்கு, புகையிலை பொருட்களுக்கு தடை என பல திட்டங்களைச் செயல்படுத்தினார். மேலும் பெண்கள் காவல்துறையில் சேர ஊக்கப்படுத்தினார்.


மாநில மக்களின் நலனுக்காக சிறந்த இலவச திட்டங்கள் அறிவிப்பதில் முதன்மையானவர் செல்வி ஜெயலலிதா. பெண்களை மையப்படுத்திப் பல நலத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டில் உள்ளது.




தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மா லேப்டாப், அம்மா குடிநீர், அம்மா குழந்தை பராமரிப்புப் பொருட்கள், அம்மா கிரைன்டர், மிக்ஸி, டேபிள் ஃபேன், அம்மா காப்பீடு, அம்மா பார்மஸி, தாய்ப்பாலூட்டுவதற்கு தனி அறை போன்ற எண்ணற்ற நல திட்டங்களைச் செயல்படுத்தியவர். 


இவை தவிர பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 13 அம்சத் திட்டம், 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் எழுத்தறிவுத் திட்டம், மகளிர் தொழில் முனைவோருக்கான பிரத்யேக தொழிற்பேட்டைகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகியவற்றையும் அமைத்தார் ஜெயலலிதா.




அம்மா, புரட்சி தலைவி, இரும்புப் பெண்மணி என மக்களால் அழைக்கப்பட்டவர் ஜெ.ஜெயலலிதா. கோல்டன் ஸ்டார் ஆஃப் ஹானர் என்ற விருதை பெற்றவர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதோடு பல்வேறு குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் இருந்த நிலையிலும் சற்றும் அசராமல் ஒற்றை ஆளாய் அனைத்தையும் எதிர்கொண்டார்.



செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 2016 உயிரிழந்தார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது இழப்பு அரசியலில் ஒரு வெற்றிடத்தை  உருவாக்கியுள்ளது எனவும் அதிமுகவினரும் அரசியல் விமர்சகர்களும் இன்றளவும் கூறி வருகின்றனர். இருந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வாக்கியத்திற்கு ஏற்றவாறு வாழ்ந்தவர் ஜெ. ஜெயலலிதா. கம்பீரமான நடை, பெண் சிங்கம் இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை அவரது கட்சியினர் நினைவுகூர்ந்து கொண்டாடி வருகின்றனர்.