சமீப காலங்களாக ஓட்டல் மற்றும் உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை செய்து தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்தப் புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது ஆசையாய் சாண்வெட்ஜ் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள்  உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ராணிப்பேட்டை மாவட்டம் பஜார் வீதி அருகே உள்ள ரஷுத் தனியார் பேக்கரியில் சாண்வெட்ஜ் சாப்பிட்ட சைமன்(10), ரூபன்(7), ஜான்சன்(9) ஆகிய மூவருக்கும் உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆற்காடு அருகே கோட்டைமேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவர் தனது குடும்பத்துடன் ராணிப்பேட்டைக்கு சொந்த வேலைக்காக சென்றுள்ளார். அப்போது பஜார் வீதியில் உள்ள ரஷீத் என்ற தனியார் கேண்டீனில் தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது சாலமனும் அவரது மனைவி ரூபியும் தேநீர் சாப்பிட்ட நிலையில் சிறுவர்களான சைமன்(10), ரூபன்(7), மற்றும் ஜான்சன்(9) ஆகிய மூவரும் சாண்வெட்ஜ் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்றதும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மூவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதே காரணம் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.


இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் போலீசார் உதவியோடு கேண்டினில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உணவு தயார் செய்யும்  இடத்திலிருந்து நிறத்தை கூட்ட பயன்படும் இரசாயன நிறமிகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடையிலிருந்த சாண்ட்வெஜ் மற்றும் இதர உணவு பொருட்களை சோதனைக்காக எடுத்துச் சென்றதோடு, கேண்டீனை தற்காலிகமாக பூட்டிவிட்டு சென்றனர் மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்  பேக்கரி கடைகளில் மாவட்டம் முழுவதுமாக சோதனை நடைபெறும் என தெரிவித்தனர்