ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் இன்று(09.08.25) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
“விஷயத்தை திறம்பட கையாண்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்“
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 இந்திய மீனவர்கள், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் சிறைபிடிக்கப்பட்ட மற்றொரு துயரமான சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு கடலை நம்பியே உயிர்வாழ்ந்து வரும் நிலையில், தற்போது சிறை வாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பபடுவதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும், நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை திறம்படக் கையாண்டு, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட, இந்திய அரசு உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்குமா.?
மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதுவது, இது முதன் முறை அல்ல. ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும்போது, இதுபோன்ற கடிதங்கள் அனுப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், மத்திய அரசு இதுவரை உறுதியான எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டதுபோல் தெரியவில்லை.
அதனால் தான் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த முறையாவது, இலங்கை அரசிடம் பேசி, மத்திய அரசு ஒரு உறுதியான நடவடிக்கையை எடுக்குமா என்பதும் தெரியவில்லை. அப்படி நடக்கும் வரை, இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற அராஜக செயல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.