அண்மைக்காலமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் குறித்துத் தொடர் கருத்துக்களைப் பதிவு செய்துவந்த தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தற்போது, அவரைக் குறித்த புது தகவல்களோ நிகழ்வுகளோ எழும் வரையில் அவரைப்பற்றி தான் வேறு எந்தக் கருத்தையும் இனி தெரிவிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 



தான் தொடர்ந்து ஊடகங்களுக்கு அளித்துவரும் பேட்டி குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, 

’பல பத்தாண்டு காலங்கள் வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளேன், உலகின் 50 மிகமுக்கிய சர்வதேச வங்கிகளில் ஒன்றிற்கு நிர்வாக இயக்குனர் & சர்வதேச தலைமை பொறுப்பையும் ஏற்று பணியாற்றியுள்ளேன். அனால், என் வாழ்நாள் பணி அனுபவத்தில் நான் ஏற்ற பொறுப்புகளில் மிக முக்கிய பொறுப்பு தமிழக அரசின் அமைச்சர் எனும் பொறுப்பு. மாண்புமிகு முதல்வர் அவர்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கையை மெய்பிக்கும் வகையிலும், நான் பொதுவாழ்க்கையில் ஈடுபடவது அவசியமாகவும் அது சாத்தியப்படவும் காரணமாக விளங்கும் என் முன்னோர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், என் திறன்கள் அனைத்தையும் பயன்படுத்தி என் கடமைகளை நிறைவேற்ற நிச்சியம் பாடுபடுவேன்.


முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கோவிட்19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் நோய்தொற்றுகளை கட்டுபடுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி அதில் என் முழுகவனத்தையும் செலுத்தி வருகிறேன். எங்கள் பணிதிட்டங்களில் பணியில் ஈடுபடுவோர் உட்பட, பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளோம். அனைவரையும் உள்ளடக்கிய, துரிதமான செயல்பாட்டு திட்டங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இவற்றை தாண்டி, மாநில நிதிநிலைமையை மேம்படுத்துவது, நம் அரசாங்கத்தின் மனிதவள நிர்வாகத்தை ஆராய்ந்து அதை சீர்செய்வது தான் என் நீண்டகால பணி முன்னுரிமை


எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக (2016-2021) நான் பதவி வகித்த போது, தமிழக ஊடகங்களும், ஓர் அளவிற்கு தேசிய ஊடகங்களும் எனக்கு அன்பும் ஆதரவும் அளித்தன. அதன் காரணமாக கழகம் & தலைவர் சார்ந்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்தது. ஆனால் அந்த காலகட்டங்களில் கூட பத்திரிகையாளர் சந்திப்புகள். தொலைக்காட்சி விவாதங்கள் ஆகியவற்றுக்கான அழைப்புகளை சிறிய அளவில் தான் நான் ஏற்றுள்ளேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். எனினும், எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளுக்கு நான் நன்றியுடன் இருப்பேன்.


நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், பத்திரிகை, இணைய ஊடகம் தொலைக்காட்சி, வானொலி என 50க்கும் மேற்பட்ட ஊடக அழைப்புகள் வந்தன. என் நன்றிக்கு அடையாளமாகவும், மாண்புமிகு தமிழக முதல்வரின் வெளிப்படையான அரசு நிர்வாகம் எனும் தத்துவத்தின் அடிப்படையிலும் அவற்றுள் 12 அழைப்புகளை மட்டுமே நான் ஏற்றேன். இந்த நேர்காணல்களின் போது, ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களை தனியார் வசம் ஒப்படைப்பது & ஜக்கி வாசுதேவின் விதிமீறல்கள் ஆகிய இரண்டு தலைப்புகள் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டன. இக்கேள்விகள் முன்வைக்கப்பட்டபோது நான் பதில் அளித்து இருந்தாலும், இவையிரண்டும் என் அமைச்சகத்துக்கு சம்மந்தப்பட்டவை அல்ல என்பதையும் என் கவனம் இதுபோன்ற விஷயங்களில் சிதற நான் விரும்பவில்லை என்பதையும் தெரிவித்துகொள்கிறேன். சம்மந்தப்பட்ட அமைச்சர்களும், துறைகளும் இவ்விஷயங்கள் மீது தக்க சமயத்தில், தேவையான நடவடிக்கைகளை எடுப்பர். சக பணியாளன் & குழுவில் ஓர் அங்கம் என்ற வகையில், தேவைப்படும்போது அவர்களின் விருப்பத்திற்கு இணங்க என் கருத்துகளையும் ஆதரவையும் நான் அளிப்பேன்.


வெளியிடப்பட வேண்டிய மிகமுக்கிய கருத்துக்கள் அனைத்தும் சமீபத்திய நேர்காணல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன். எனவே, இம்மாத இறுதிவரை ஊடகம் சார்ந்த சந்திப்புகள் அனைத்தையும் நிறுத்தி, கோவிட்19 சார்ந்த பணிகளில் என் முழுகவனத்தையும் செலுத்த விரும்புகிறேன். இதற்கு, நம் ஜனநாயகத்தின் மிகமுக்கிய தூணாக விளங்கும் ஊடக நண்பர்கள் அனைவரின் ஆதரவையும் விழைகிறேன்.


மேற்கூறிய இரண்டு தலைப்புகளில் ஏதேனும் கேள்விகள் மீதம் இருக்கும் பட்சத்தில், அதற்கு விடையளிக்கும் நோக்கத்தில் இரண்டு அறிக்கைகளை சமர்பிக்கிறேன். நான் பதிலளிக்கும் வகையில் ஏதேனும் பிரச்சனை எழும் பட்சத்தில், அதற்குரிய அறிக்கைகளை வெளியிடுவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை மீண்டும் தெரிவித்துகொள்கிறேன்.


ஜக்கி வாசுதேவ் மீது விசாரணை அல்லது வழக்கு தொடர்வது என் கடமையும் அல்ல, எனது நோக்கம் அல்ல. நான் நிச்சயமாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் பகிர்ந்து கொள்ளவுள்ள சான்றுகளின் அடிப்படையில், ஜக்கி வாசுதேவ் பல சட்டங்களையும் விதிகளையும் ஒவ்வொரு முறையும், தொடர்ச்சியாகவும் மீறியுள்ளார் என்பது அனைத்து சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதை உணர்த்தும். எனினும், இந்திய & அமெரிக்காவில் உள்ள சம்மந்தப்பட்ட துறைகளும் அது சார்ந்த அதிகாரிகளும் எவ்வித இடையூறும் (அது என்னுடையதாக இருந்தாலும்) இன்றி இதுகுறித்து தீர விசாரிக்க வேண்டும்.


மேலும் இவரைக் குறித்து புது தகவல்களோ நிகழ்வுகளோ எழும் வரையில் இதைப் பற்றி நான் வேறு எந்த கருத்தையும் இனி தெரிவிக்கப்போவதில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.