வேலாயுதம்பாளையத்தில் என்ஜினியர் படித்த இளம்பெண் வயிற்று வலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலாயுதம்பாளையம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், அண்ணாநகர் கீழ்மேல் வீதியை சேர்ந்தவர் முருகையன். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி செல்வாம்பாள் (வயது 45) இவர் வேலாயுதம்பாளையம் அருகிலுள்ள தமிழ்நாடு காகித ஆலையில் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு பிரியங்கா (26) என்ற மகளும், பிரவீன்குமார் (24) என்ற மகனும் உள்ளார்.




 


தாய் வருமானத்தில் பிரியங்காவும், பிரவீனும் படித்து முடித்துள்ளனர். பிரியங்கா என்ஜினீயரிங் படித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாயின் சுமையை குறைக்க இன்ஜினியரிங் படைத்த பிரியங்கா பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்புக்காக தேடி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு சிறு வயதில் இருந்தே, வயிற்று வலி தொந்தரவு இருந்துள்ளது. அதற்காக அவர் தாயின் உதவியுடன் பல்வேறு மருத்துவமனைகளில் பார்த்துள்ளார். இருந்தபோதிலும் வயிற்று வலி சிகிச்சை பலன் கிடைக்கவில்லை எனத் தெரியவருகிறது. இதனால் பல்வேறு நாட்களில் மன உளைச்சல் உடனே இருந்து வந்துள்ளார், இளம்பெண் பிரியங்கா.




இந்நிலையில் நேற்று காலைநேர வேலைக்கு தாய் செல்லவேண்டிய நிலையில், அதிகாலை 5 மணிக்கு வழக்கம் போல் பிரவீன் குமார் தனது தாயார் செல்வாம்பாளை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று தமிழ்நாடு காகித ஆலையில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த பிரியங்காவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரியங்கா வீட்டில் யாரும் இல்லாத நிலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



தாயை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குவந்த பிரவீன் குமார் தூக்கில் தொங்கியபடி இருந்த பிரியங்காவை பார்த்து கதறி அழுததுடன், இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார் அக்கம்பக்கத்தினரை அழைத்து, பிரியங்காவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பிரியங்காவை பரிசோதித்த அரசு மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பணியிலிருந்த பிரியங்காவின் தாயாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு பிரியங்காவின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 


இந்த தற்கொலை சம்பவம் குறித்து பிரியங்காவின் தாய் செல்வாம்பாள் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலாயுதம்பாளையம் அருகே இன்ஜினியரிங் படித்த இளம்பெண் வயிற்றுவலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் சம்பவம் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது அருகில் வசிப்பவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050