சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் தனுஷ் என்பவர் நீட் அச்சம் காரணமாக உயிரிழந்துள்ளார். இது மிகவும் துயரமான சம்பவம். பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். விரைவில் அவர் இல்லத்திற்கு சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். இதற்கெல்லாம் காரணம் தமிழகத்தில் திமுக நீட் தேர்வை வைத்துக்கொண்டு மிகப்பெரிய அரசியல் செய்து கொண்டிருப்பதுதான்- என்று பேசியுள்ளார் அண்ணாமலை

”சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர். இது நீட்டை வைத்து அவர்கள் வியாபாரம் செய்வதற்கு எதிராக வெளிநடப்பு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு இதுவரை தமிழகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2010-ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி தான் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு முன்பு நீட் நுழைவுத்தேர்வை எழுத தீர்மானம் கொண்டு வந்தது. நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் திமுக கூட்டணியாக இருந்தாலும் கூட நீட் என்பது ஏழை எளிய மாணவர்களுக்கும், நடுத்தர மாணவர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கிறது. அவர்கள் கொண்டுவந்த தீர்மானத்தையே எதிர்த்து தற்போது தமிழக சட்டமன்றத்தில் அரசியல் பேசி வருகின்றனர்.



தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கையும்,தேர்ச்சி பெறும் சதவீதங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே தமிழக மக்கள் நீட்தேர்வை ஏற்றுக்கொண்டுள்ளனர். 2006 முதல் 2015-ஆம் ஆண்டு வரை நீட் தேர்வுக்கு முன்னால் இருந்த தேர்வுகள் மூலமாக தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ,மாணவிகள் தமிழக அரசு மருத்துமனையில் எத்தனை பேர் சேர்ந்தார்கள் என்பது குறித்து திமுக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த பத்து வருடங்களில் மொத்தமாகவே 190 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

 

மேலும் திமுக தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் எத்தனை மாணவர்களை அனுமதிக்கிறார்கள் என்பது குறித்தும் தைரியமிருந்தால் திமுக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்கள் யாரும் எந்தக் குறையும் கூறவில்லை, ஆனால் திமுகவினர் செய்யும் அரசியல் காரணமாக மாணவர்கள் உயிரிழந்து இருகின்றனர். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், என்பதற்கு உதாரணமாக நேர்மையான அரசியல் செய்து இருந்தால் திமுகவினர் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.



யாரெல்லாம் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து பொய் வாக்குறுதி கொடுத்தார்களோ அவர்கள் மீது காவல்துறை இயக்குனர் மற்றும் சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தனுஷ் அவர்களின் மரணத்திற்க்கு நாம் கொடுக்கும் நீதியாக இருக்கும். நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது கிடையாது. தமிழகத்திற்கு எதிரானது கிடையாது. சமூக நீதிக்கு எதிரானது கிடையாது. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை நாங்கள் பொய்யைக் கூறி, மக்களின் மனநிலையை மாற்றி ஓட்டை வாங்கி எம்எல்ஏ, எம்பி-கள் ஆக வேண்டும் என்று எண்ணம் எங்களுக்கு கிடையாது. நாட்டு மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் எது தேவையோ அதை உரக்கச் சொல்வோம்.

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் பணம் கொடுக்காமல், அரசியல்வாதியை நாடாமல் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியுமென்றால் அது நீட் தேர்வின் மூலமாக மட்டும்தான் முடியும். தமிழகத்தில் திமுகவினர் தலைகீழாக நின்றாலும் கூட நீட் தேர்வு நடக்கும், மூன்று விவசாய சட்டங்களால் தமிழகத்தில் இருக்கும் தமிழக விவசாயிகளின் தரம் உயர்வதை திராவிட முன்னேற்ற கழகத்தினால் தடுத்து நிறுத்த முடியாது. முடியாது என தெரிந்தும் தமிழகத்தில் திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.