ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல் தகனம் செய்யப்பட்டது. ஈரோட்டில் உள்ள மின் மயானத்துக்கு திருமகன் ஈவெரா உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 


இறுதி ஊர்வலத்தில் கே.எஸ். அழகிரி, கே.வீ. தங்கபாலு, அமைச்சர் சு. முத்துசாமி, ஜோதிமணி எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா(Thirumagan Evera) இன்று மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46. ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா பதவி வகித்து வந்தார். அவரின் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல்‌ தெரிவித்தனர். 






அரசியல் தலைவர்கள் அஞ்சலி


இந்த நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஈ.வெ.ரா. திருமகன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னையில் இருந்து புறப்பட்டார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்று, அங்கிருந்து காரில் ஈரோடு சென்றார். அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, முத்துசாமி, ஆர்.காந்தி, அன்பில் மகேஸ், செந்தில் பாலாஜி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர்  உடன் சென்றனர்.


மேலும், இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாள்.  இந்நிலையில், ஈ.வெ.ரா. திருமகன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திமுக துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின், வரும் முதல் பிறந்தநாளில் கனிமொழி முன்னணித் தலைவர்களிடம், வாழ்த்து பெற திட்டமிட்டிருந்த நிலையில், கனிமொழி தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு காலையில் முதல் நிகழ்ச்சியாக துக்க நிகழ்வுக்குச் சென்று, திருமகனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.