ஈரோடு கிழக்கு தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.


இடைதேர்தல் அறிவிப்பு:


கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால்  திடீரென மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, வேட்புமனுத்தாக்கல் செய்து, திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டன. இந்நிலையில், இடைதேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தற்போது துவங்கியது. மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்தபிறகு மின்னணு இயந்திரங்கள் மீண்டும் சரி செய்யப்பட்டு 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.


களத்தில் உள்ள வேட்பாளர்கள்:


தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வேட்பாளர் பட்டியலின்படி, ஈரோசு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் 77 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில், திமுக. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சாரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.


வாக்காளர் விவரங்கள்:


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்களும், 25 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர்.


பாதுகப்பு ஏற்பாடுகள்:


வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவற்றில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், வெப் கேமராக்களும் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்குப்பதிவு பணிகள் கண்காணிக்கப்பட உள்ளன. 


அடுக்கடுக்கான புகார்கள்:


இடைதேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக கட்சியினர் ஈரோடு தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மநீம தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரேமலதா, சுதீஷ், ஜி.கே.வாசன், ஆளுங்கட்சி அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள்,மூத்த நிர்வாகிகள் என பலரும் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தனர்.  அதோடு, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி கொலுசு, பணம் என வாக்காளர்களுக்கு ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கபட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான், ஆளும் திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சிக்கு மதிப்பெண் அளிக்கும் விதமாக இன்றைய தேர்தல் நடைபெற உள்ளது.