ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பில் நின்ற தென்னரசு கல்லு பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். 


எனக்குத்தான் வெற்றி:


அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பேசிய தென்னரசு, “தேர்தல் சுமுகமான நடக்கிறது. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.100 சதவீத மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என நான் சொல்வேன். ஈவிகேஎஸ் இளங்கோவன் மூத்த அரசியல்வாதி. அவரைப் பற்றி குறை சொல்ல முடியாது. ஒருசில இடங்களில் வைக்கப்பட்ட மை அழிவதாக சொன்னார்கள். அது குறித்து எனக்கு சரியாக தெரியவில்லை.


25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்:


77 வேட்பாளர்கள் இருப்பதால் தேர்தல் தாமதமாக நடக்கிறது.வேகமாக நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்


கொரோனா காலத்தில் நான் பணி செய்யவில்லை என எனக்கு ஆகாதவர்கள் சொல்கிறார்கள். அதையே முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் சொன்னார்கள். கொரோனா காலத்தில் நான் செய்த பணி அவர்களுக்கு தெரியவில்லை. மக்களுக்கு தெரியும்.


மக்கள் முடிவு:


முதலமைச்சருக்கு சொல்லிக் கொடுத்ததை சொல்கிறார். முதலமைச்சர் மரியாதைக்குரியவர். அவர் குறித்து தவறாக நான் சொல்லவில்லை.கொரோனா காலத்தில் நான் பணி செய்யவில்லை என்பவர்களுக்கு கண் தெரியவில்லை என அர்த்தம். தேர்தல் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் தவறுகள் இருந்தது உண்மைதான். ஆனால் அனைத்து சரி செய்யப்பட்டது. என்ன செய்தாலும், யார் வர வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.” என தெரிவித்தார். 


கள நிலவரம்:


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தேர்தல் அதிகாரி கே.எஸ். சிவக்குமார் கூறுகையில், “ ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 2.26 லட்சம் வாக்காளர்கள் வசதியாக வாக்களிக்கும் வகையில் போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான சுமார் 2,500 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தொகுதியில் மொத்தமுள்ள 238 வாக்கு சாவடி மையங்களில் 32 வாக்கு சாவடிகள் பதட்டமான சூழ்நிலைகளில் இருக்கும் என அடையாளம் காணப்பட்டு அங்கு துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தற்போது நடைபெற்று வரும் வாக்கெடுப்பானது பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய மாலை 6 மணியுடன் முடிவு பெறுகிறது. மார்ச் 2ம் தேதியன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவும் வெளியிடப்பட இருக்கிறது.