ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 


சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். 


அதேசமயம் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால் கூட்டணி நலன், எதிர்கால மக்கள் நலன் கருதி அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்து விட்டது.  ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளார். 


அதேசமயம் தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறும் ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தலில் தங்கள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


வேட்பாளரை அறிவித்த அமமுக 


இந்நிலையில் அமமுக சார்பில் சிவபிரசாந்த் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இவர் அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த  டிடிவி தினகரன், ஈரோடு தேர்தலில் அமமுகவினர் 294 பேர் தேர்தல் பணிக்குழுவில் ஈடுபடுவார்கள் என்றும், இந்த தேர்தலில் திமுகவிற்கு பாடம் புகட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.