வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ண ஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் திமுக அரசுக்குக்  கண்டனம் என்று எதிர்க் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 17 நாட்கள் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இதற்கிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஃபார்முலா 4 கார் ரேசிங் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இவை குறித்து ஈபிஎஸ் விமர்சித்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:


’’திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம்போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே விடியா அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன. வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன.


போதைப்பொருள் புழக்கமும் கடுகளவு குறைந்த பாடில்லை. திமுக ஆட்சியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றாலும் மிகையாகாது. இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இடையே இந்த போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக புழங்குவதை சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன. இது மிகுந்த கவலையளிக்கிறது.






போட்டோஷூட்டிலும், ஆடம்பர கார் ரேஸிலும் மட்டுமே கவனம்


வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ண ஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.


அடுத்து என்ன விளம்பரம் என்பதில் மட்டுமே இருக்கும் கவனத்தை, மாநிலத்தின் அடிப்படை பிரச்சனைகளான சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்’’.


இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.