அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியிடம் 2வது நாளாக நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்றது. 


வழக்கின் பின்னணி


கடந்த 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக செயல்பட்ட பொன்முடி, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் தனது சொந்த பட்டா நிலத்தில் உள்ள செம்மண்ணை அள்ளுவதற்கு அரசின் அனுமதி கோரி விண்ணப்பித்தார். பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி பெயரில் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் மிக குறுகிய காலக்கட்டத்துக்குள் அனுமதி வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பொன்முடியின் உறவினர்களும் மண் அள்ள அனுமதி பெற்றிருந்தனர். 


இதனையடுத்து 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தது. அப்போது செம்மண் எடுத்தது தொடர்பாக பொன்முடி, கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன், லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச் சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீது 2012 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் அனைவரையும் விடுவித்தது. 


இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. அதேசமயம்  வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதி ஜி.சந்திரசேகரன், விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டார்.


அமலாக்கத்துறையினர் சோதனை 


இதனிடையே நேற்றைய தினம்  அமைச்சர் பொன்முடி, மகனும், எம்.பி.யுமான கௌதசிகாமணிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர்  சோதனை நடத்தினர். கிட்டதட்ட 13 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து இருவரும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை இருவரிடமும் விசாரணை நடைபெற்றது. 


இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி இன்று மாலை 4 மணி அளவில் பொன்முடி, கௌதமசிகாமணி இருவரும் ஆஜராகினர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது. விசாரணையின்போது அமைச்சர் பொன்முடியிடம் ஆம், இல்லை என்ற அடிப்படையில் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.


அதேபோல் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பியுமான கௌதம சிகாமணியிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அமைச்சர் பொன்முடி, எம்.பி. கௌதம சிகாமணி இருவரும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.