ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் கடந்த ஆட்சியில் துணை முதல்வர் பொறுப்பை வகித்தவருமானவர் ஓ.பன்னீர்செல்வம். அவரது தாயார் பழனியம்மாள் நாச்சியார். அவருக்கு வயது 95. வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவாக இருந்த பழனியம்மாள் நேற்று இரவு இயற்கை எய்தினார்.


தாயார் உயிரிழந்த தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக  சென்னையில் இருந்து தேனி புறப்பட்டு சென்றார். அங்கு பெரியகுளத்தில் வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை கண்ட ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் விட்டு அழுதார்.




ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு செய்தி அறிந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் உடனடியாக பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு குவிந்தனர்.


அவரது மறைவு ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.


தி.மு.க. தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தன்னுடைய இரங்கல் செய்தியில்,


“முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார்.


செய்தியாளர்கள் கேள்வி:


ஓபிஎஸ் தாயார் மறைந்துவிட்டாரே என்று ஈரோட்டில் செய்தியாளர் கேள்வி கேட்ட பின், எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.


அவர் தெரிவித்ததாவது, அண்ணன் ஓபிஎஸ் தாயார் மறைவு வருத்தமளிக்கிறது. அவரை இழந்துவாடும் அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.