தமிழ்நாட்டின்‌ விடுதலைப்‌ போராட்ட வரலாற்றை அறியாத - குறுகிய மனம்‌ படைத்த சிலரது சதியால், சங்கரய்யா‌வுக்கு முனைவர் பட்டம் வழங்குவது நடந்தேறாமல்‌ போனதை எண்ணி‌ மனம்‌ வருந்துவதாக முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். 


தகைசால்‌ தமிழர்‌, விடுதலைப்‌ போராட்ட வீரர்‌ தோழர்‌ என்‌. சங்கரய்யா‌ மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ இரங்கல்‌ செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


''தகைசால்‌ தமிழர்‌ - முதுபெரும்‌ பொதுவுடைமைப்‌ போராளி - விடுதலைப்‌ போராட்ட வீரர்‌ தோழர்‌ என்‌. சங்கரய்யா‌ மறைந்த செய்தியால்‌ துடிதுடித்துப்‌ போனேன்‌. மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமகிக்கப்பட்டிருந்த அவர்‌ விரைந்து நலம்‌ பெற்று விடுவார்‌ என்றே நம்பியிருந்த வேளையில்‌ அவர்‌ மறைந்த செய்தி வந்து அதிர்ச்சியையும்‌ வேதனையையும்‌ அளித்தது.


வரலாற்றில்‌ நிலைத்து நிற்கும்‌


மிக இளம்‌ வயதிலேயே பொதுவாழ்க்கையில்‌ ஈடுபட்டு, 102 வயது வரை இந்திய நாட்டுக்காகவும்‌, உழைக்கும்‌ வர்க்கத்துக்காகவும்‌, தமிழ்‌ மண்ணுக்காகவும்‌ வாழ்ந்து மறைந்த தோழர்‌ சங்கரய்யா அவர்களின்‌ வாழ்க்கையும்‌ தியாகமும்‌ என்றென்றும்‌ வரலாற்றில்‌ நிலைத்து நிற்கும்‌.


மதுரை அமெரிக்கன்‌ கல்லூரி மாணவராக இருந்தபோதே விடுதலை வேட்கையோடு மாணவர்‌ சங்கச்‌ செயலாளராகப்‌ போராட்டங்களை முன்னெடுத்தவர்‌ தோழர்‌ சங்கரய்யா‌. அவரது தேசியம்‌ சார்ந்த செயல்பாடுகளால்‌ பலமுறை சிறையில்‌ அடைக்கப்பட்டு படிப்பைத்‌ துறந்தவர்‌. இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னர்தான்‌ அவர்‌ விடுதலை செய்யப்பட்டார்‌. இப்படிப்பட்ட விடுதலைப்‌ போராட்ட வீரருக்கு 2021ஆம்‌ ஆண்டு விடுதலை நாளினை முன்னிட்டு நேரில்‌ சென்று முதல்‌ “தகைசால்‌ தமிழர்‌ விருதை வழங்கியது எனக்குக்‌ கிடைத்த வாழ்நாள்‌ பேறு! விருதோடு கிடைத்த பெருந்தொகையைக்‌ கூட கொரோனா நிவாரண நிதிக்காக அரசுக்கே அளித்த தோழர்‌ சங்கரய்யா மாண்பால்‌ நெகிழ்ந்து போனேன்‌.


தோழர்‌ சங்கரய்யாஒரு சிறந்த சட்டமன்ற உறுப்பினராகவும்‌ திகழ்ந்து நினைவுகூரத்தக்க பல பணிகளை ஆற்றியவர்‌. கலைஞரின்‌ உற்ற நண்பராக விளங்கியவர். கலைஞர்‌ நிறைவுற்றபோது, அவரது இறுதிப் பயணத்தைக்‌ கண்டு கண்கலங்கிய காட்சி இருவருக்குமான நட்பைப்‌ பறைசாற்றியது!


தவிர்க்க முடியாத ஆளுமை


இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சியிலும்‌ அதன்‌ பின்னர்‌ மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியிலுமாக இருந்து அவர்‌ நடத்திய போராட்டங்களும்‌, தீக்கதிர்‌ நாளேட்டின்‌ முதல்‌ பொறுப்பாசிரியர்‌ முதலிய பல்வேறு பொறுப்புகளில்‌ ஆற்றிய செயல்பாடுகளும்‌ தமிழ்நாட்டின்‌ பொதுவுடைமை இயக்க வரலாற்றில்‌ அவரது தவிர்க்க முடியாத ஆளுமையை வெளிக்காட்டும்‌.


குறுகிய மனம்‌ படைத்த சிலரது சதி!


பொதுத்‌ தொண்டே வாழக்கையென வாழந்த இச்செஞ்சட்டைச்‌ செம்மலுக்கு மதுரை காமராசர்‌ பல்கலைக்கழகம்‌ மூலமாக மதிப்புறு முனைவர்‌ பட்டம்‌ வழங்க ஆவன செயயப்படும்‌ என இந்த ஆண்டு ஜூலை 1 அன்று நான்‌ அறிவிப்பு செய்திருந்தும்‌, தமிழ்நாட்டின்‌ விடுதலைப்‌ போராட்ட வரலாற்றை அறியாத - குறுகிய மனம்‌ படைத்த சிலரது சதியால்‌ அது நடந்தேறாமல்‌ போனதை எண்ணி இவ்வேளையில்‌ மேலும்‌ மனம்‌ வருந்துகிறேன்‌.


தகைசால்‌ தமிழர்‌, முனைவர்‌ மட்டுமல்ல, அவற்றிற்கும்‌ மேலான சிறப்புக்கும்‌ தகுதி வாய்ந்த போராளிதான்‌ தோழர்‌ சங்கரய்யா‌. சிறப்புகளுக்கு அவரால்‌ சிறப்பு என்று சொல்லத்தக்க அப்பழுக்கற்ற தியாக வாழ்வுக்குச்‌ சொந்தக்காரர்‌ அவர்‌.


மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சித்‌ தோழர்களுக்கும்‌, தமிழ்நாட்டுக்கும்‌ அவரின்‌ மறைவு எப்போதும்‌ ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்‌. அவரது அனுபவமும்‌ வழிகாட்டலும்‌ இன்னும்‌ சில ஆண்டுகள்‌ கிடைக்கும்‌ என எண்ணியிருந்த எனக்கு அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும்‌ பேரிழப்பு.


சாதி, வர்க்கம்‌, அடக்குமுறை ஆதிக்கம்‌ ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம்‌ போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும்‌ அவரது குடும்பத்தினர்‌, பொதுவுடைமை இயக்கத்‌ தோழர்கள்‌, பல்வேறு அரசியல் இயக்கங்களைச்‌ சேரந்த நண்பர்கள்‌ உள்ளிட்ட அனைவருக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌ ஆறுதலையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.


விடுதலைப்‌ போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல்‌ கட்சித்‌ தலைவராக அவர்‌ தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப்‌ போற்றும்‌ விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன்‌ பிரியாவிடை அளிக்கப்படும்‌''.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.