ADMK Protest: போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பதை கண்டித்து தமிழ்நாட்டில், வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அதிமுக ஆர்பாட்டம்:


இதுதொடர்பான அறிக்கையில், “திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும்; தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும்; போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில், வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். அதன்படி, அதிமுகவினர் தற்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். 


 


முன்னாள் திமுக பிரமுகருக்கு தொடர்பு:


அதோடு, “ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதைப் பொருட்களை புழக்கத்தில் விடுகின்ற கும்பலை, அந்த நாடுகளுடைய காவல் துறை தேடி வந்த நிலையில், அவர்கள் இந்தியாவிலே இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்த பிறகு, Narcotics Control Bureau என்று சொல்லப்படுகின்ற NCB அமைப்பும், இந்த போதைப் பொருட்களைத் தடுப்பதற்காக இயங்குகின்ற டெல்லியினுடைய சிறப்பு போலீஸ் அமைப்பும் இணைந்து நடத்திய சோதனையில், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இந்த கும்பலுடைய தலைவனாக செயல்பட்டவர் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் அ. ஜாபர் சாதிக் தான் என்ற செய்தியும், அவரை காவல் துறை தேடுகிறது என்ற செய்தியும் வந்தபோதுதான், உண்மையிலேயே தமிழக மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர். 


”தமிழகத்திற்கு அவமானம்”


போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக்,  திமுக அரசின் முதலமைச்சருடனும், விளையாட்டுத் துறை அமைச்சருடனும், மேலும் பல அமைச்சர்களுடனும் எடுத்துள்ள புகைப்படங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளிவந்துள்ளன. இந்த அரசியல் பின்புலத்தை வைத்துக்கொண்டு ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தமிழ் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய தலைகுனிவாகும். இன்று, தமிழ் நாட்டைத் தாண்டி, இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் தலைவனாக செயல்பட்டுள்ள திமுக-வைச் சேர்ந்த ஜாபர் சாதிக்கால் தமிழ் நாட்டிற்கே மிகப் பெரிய தலைகுளிவு ஏற்பட்டுள்ளது” என்றும் எடப்பாடி பழனிசாமியின் கூறியிருந்தார்.