விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமகவை 36 ஆம் ஆண்டில் துவக்க நாளை முன்னிட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சியின் கொடியை ஏற்றி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். 


பின்னர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்...


பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளது. அதில் சமத்துவம், சமூக நீதி, சகோதரத்துவம் இந்த மூன்று கொள்கைகளை சமூக ஜனநாயகம் என்கின்ற உன்னதமான கொள்கையின் அடிப்படையிலேயே தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பாடுபட்டு வருகின்றோம். தொடர்ந்து பாடுபட போகிறோம்., தமிழ்நாட்டு மக்கள் ஏனோ தெரியவில்லை பெரிய அளவிலே ஆதரவு தரவில்லை அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இது போன்று கொள்கை உடைய 35 ஆண்டு காலம் இந்த மக்கள் பிரச்சினைக்காக எந்த பிரச்சனையானாலும் குரல் கொடுக்கும் என்னிடம் தான் வருகின்றார்கள். நான் தான் அதற்காக போராடுகிறேன் அதற்காக அறிக்கை விடுகிறேன். ஆனாலும் மக்கள் என் பின்னாலே முழுவதும் வர மறுக்கிறார்கள், தயங்குகிறார்கள் ஏனோ தெரியவில்லை, ஆனால் எதிர்காலத்திலே தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு மொத்தமாக பாட்டாளி மக்கள் கட்சியின் பின்னால், என் பின்னாலே வருவார்கள் என்று நம்புகிறேன்.


ஒளிமயமான எதிர்காலம் தமிழ்நாட்டுக்கு இருக்கும் என்று நிச்சயமாக தெரிவித்துக்கொள்கிறேன். மின்கட்டண உயர்வு குறித்து வியாழக்கிழமை தோறும் நான் அறிக்கையில் வெளியிட்டு வருகிறேன். நான் ஏற்கனவே தெரிவித்தது தான் தற்போது மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளார்கள் இதை யார் கேட்கப் போகிறார்கள்.


தமிழ்நாட்டு மக்களை தேர்தல் நேரத்தில் ஆயிரம், இரண்டாயிரத்திற்கு விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதற்கு மக்கள் என்ன சொல்லப் போகிறார்கள். இதற்கு என்ன செய்யப் போகிறார்கள். இதற்கு தண்டனை கொடுக்கப் போகிறார்களா. எந்த தண்டனையும் கொடுக்கப் போவதில்லை, அந்த தேர்தல் நேரத்தில் கொடுக்கிற டோக்கன், மற்ற இதர சலுகைகளுக்கே அடிமையாகி போன தமிழ்நாட்டு மக்களுக்கு நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்னும் எல்லாவற்றையும் உயர்த்துவார்கள் என்ன செய்யப் போகிறோம்.


இந்த மக்களுக்காக எத்தனையோ போராட்டங்கள் செய்து இருக்கிறேன். தேர்தல் நேரத்தில் ஒரு நல்ல கட்சியை ஞானயமான கட்சியை வெகு மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த கட்சியை கோட்டைக்கு அனுப்ப தவறுகிறார்கள். அதனால் செய்பவர்கள் செய்து கொண்டே தான் இருப்பார்கள் தினமும் மக்களுக்காக ஒரு அறிக்கையை வருடத்தில் ஆயிரக்கணக்கான அறிக்கையை தமிழ்நாடு மக்களுக்காக சமூக நீதி, சமத்துவம்,சகோதரத்துவம், சமூக ஜனநாயகம் என்ற கொள்கையின் மூலம் ஆகியவற்றை பாமக கடைப்பிடித்து வருகிறது. 60 நாடுகளில் சமூக ஜனநாயகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையே பாமக கொள்கையாக பின்பற்றி வரும் நிலையில் இதற்கு அனைத்து ஊடகங்களின் ஆதரவு எனக்கு தேவை என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி நிறைவு செய்தார்.