பா.ம.க. எம்.எல்.ஏ. வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்பாக சதாசிவம் குடும்பத்தினர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சதாசிவம். இவர் பா.ம.க. கட்சியைச் சேர்ந்தவர். இவர் மனைவி பேபி. மகன் சங்கர்; மகள் கலைவாணி. மகனுக்கு கடந்த 2019 ம் ஆண்டு முருகேசன் என்பவது மகள் மனோவியுடன்  திருமணம் நடந்தது. சங்கர் - மனோவியா தம்பதியினருக்கு பெண் குழந்தை உள்ளது.


இருவர்கள் இருவரும் சமீப காலமாக பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனோவியா கணவரை பிரிந்து தந்தை வீடில் வசித்து வருகிறார். மூன்று வாரத்திற்கு முன்பு சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “ திருமணத்தின்போது கார் ஒன்றும் 250 பவுன் தங்க நகைகளும் என் பெற்றோர் திருமண சீர் வரிசையாக எனக்கு அளித்தனர். தற்போது மீண்டும் கார் கேட்டு எனது கணவர் கொடுமைபடுத்துகிறார். இதற்கு மாமனார் எம்.எல்.ஏ. சதாசிவமும் மாமியார் பேபியும் உடந்தை.” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்த புகாரின் பேரில் விசாரித்த சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் எம்.எல்.ஏ மகன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வரதட்சணை, கொடுமைபடுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக சேலம் மேட்டூர் பாமகவினரிடம் பேசியபோது "எம்.எல்.ஏ சதாசிவம், தான் பார்த்து கொண்டிருந்த தொழிலை மகன் சங்கர் கவனித்து கொள்ளும்படி கொடுத்துவிட்டார். எம்.ல்.ஏ ஆனதில் இருந்து தொழிலை மகன் சங்கர் தான் பார்த்து கொள்கிறார். இது குடும்ப விவகாரம் பெரிதாக எதுவும் வெளியே வராது. சங்கருக்கும் அவரது மனைவிக்கும் மனஸ்தாபங்கள் இருந்தது, யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துபோனால் பிரச்னை சரியாகிவிடும்" என்று கூறினார்கள்.


நேரில் ஆஜராக உத்தரவு


 இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எம்.எல்.ஏ.சதாசிவம், மகன் சங்கர் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடந்தது. அப்போது சதாசிவம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஜாதா, ’கடந்த பிப்ரவரி மாதம் முதல் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், தங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளுடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். 


அதோடு, காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை இருக்கிறதா என காவல்துறையிடம் நீதிபதி கேள்வி எழுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியும் சதாசிவம் குடும்பத்தினர் ஆஜராகவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 4-ம் தேதி காலை 11 மணிக்கு சூரமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சதாசிவம் குடும்பத்தினருக்கு உத்தரவிட்டு, முன் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.