ஸ்விகி உள்ளிட்ட ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மதுவைக் கொண்டு சென்று விற்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து டாஸ்மாக் விளக்கம் அளித்துள்ளது.


அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, ஆன்லைன் மூலம் மதுவை விற்பது உள்ளிட்ட புதிய முயற்சிகளில் இறங்கும் திட்டம் எதுவுமில்லை என்றும் டாஸ்மாக் தெரிவித்துள்ளது. டெட்ரா பாக்கெட் எனப்படும் காகிதக் குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யுவும் திட்டமிடப்படவில்லை எனவும் டாஸ்மாக் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில்  பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை  சொமாட்டோ, ஸ்விகி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு  திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இதற்குக் கடும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. 


மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம்


இதை எதிர்த்து பாமக போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.  இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘’தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி  அளித்த முதலமச்சர் மு.க.ஸ்டாலின், மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களை அனுமதிக்கக் கூடாது.  மது வகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்’’ என்று கூறியிருந்தார்.


இந்த நிலையில், வீடுகளுக்கே மதுவைக் கொண்டு சென்று விற்கும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, ஆன்லைன் மூலம் மதுவை விற்பது உள்ளிட்ட புதிய முயற்சிகளில் இறங்கும் திட்டம் எதுவுமில்லை என்று டாஸ்மாக் தெரிவித்துள்ளது. டெட்ரா பாக்கெட் எனப்படும் காகிதக் குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யுவும் திட்டமிடப்படவில்லை எனவும் டாஸ்மாக் தெரிவித்துள்ளது.