தேர்தல் வெற்றி:


கடந்த 4ஆம் தேதி, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கிடைத்துள்ளது. 


தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்ற கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.


தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 9 லட்சத்து 80 ஆயிரத்து 791 வாக்குகள் பதிவாகி இருந்தன. தி.மு.க வேட்பாளர் கனிமொழி 6-வது சுற்றிலேயே 1,67,194 வாக்குகளை பெற்று டெபாசிட் தொகையை உறுதி செய்தார்.இவரை தவிர அ.தி.மு.க வேட்பாளர் ரா.சிவசாமி வேலுமணி, த.மா.கா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், ஜா.ரொவினா ரூத் ஜேன் உள்ளிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதற்கான வாக்குகளை எட்டவில்லை. இதனால் 27 வேட்பாளர்களும் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனர்.






திமுக நாடாளுமன்ற தலைவர் :


இது தி.மு.க. ஆட்சிக்கு கிடைத்து இருக்க கூடிய வெற்றி. அதே போன்று பா.ஜனதாவுக்கு எதிராக கிடைத்த வெற்றி. தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு நிச்சயமாக வரும் காலம் கிடையாது. எங்கள் வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்கள். முதல்-அமைச்சர் மீது நம்பிக்கையாலும், எதிர்க்கட்சியினர் மீது நம்பிக்கை இல்லாததாலும் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என கனிமொழி தெரிவித்தார். 




இந்நிலையில், தற்போது திமுக கட்சியின் நாடாளுமன்றத்தின் தலைவராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  மேலும் மக்களவையின் தலைவராக எம்.பி. டி. ஆர் பாலுவும், மாநிலங்களவையின் தலைவராக எம்.பி சிவா-வும், நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.