மாநில அரசியலுக்கு வருவது குறித்து கட்சி முடிவு செய்யும் என மாணவர்களின் கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார்.


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, சவாலான நேரத்தில் கட்சி தலைமை ஏற்று தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார் ஸ்டாலின். 2019 மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தல் என அனைத்திலும் மெகா வெற்றி பெற்றிருக்கிறது திமுக. 


ஸ்டாலினை தொடர்ந்து அவரது மகன் உதயநிதிக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதிதான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.


இந்த நிலையில், மாநில அரசியலுக்கு வருவது குறித்து கட்சி முடிவு செய்யும் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 


சென்னை மைலாப்பூரில் நேற்று மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் அரசியல் நுழைவு, வாரிசு அரசியல், திராவிட மடல், இந்தித் திணிப்பு, சாதி மறுப்பு திருமணம், ஆணவக் கொலை, சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். 


குறிப்பாக அரசியல் நுழைவுக் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கருணாநிதி கைது நிகழ்வு அனைத்துமே புதிதாக இருந்ததாகவும் காவலர்களுடன் தான் ஒரு சாதாரண கேள்வி எழுப்பியபோது, அதனையும் குற்றமாக எதிர்கொண்ட தருணத்தை நினைவு கூர்ந்தார்,


"அந்த அசாதாரண தருணத்திலும் கருணாநிதி எளிதாகப் பயமின்றி, தெளிவாக ஒரு போராளியாக எதிர்கொண்டார். அதுவே எனது அரசியல் நுழைவு" என்றார்.


குடும்ப அரசியல் என்ற கேள்விக்கு, முதலமைச்சர் ஸ்டாலினின் நீண்ட அரசியல், அவசரக் காலச் சிறைவாசம், பல்வேறு பதவிகளில் மக்கள் சேவையில் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டுப் பதிலளித்தார்.


கடைசியாக மாநில அரசியலுக்குத் திரும்புவது மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு, அதனை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சரவை தான் முடிவு செய்யும் என்று பதிலளித்தார்.


கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலேயே கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2019ஆம் ஆண்டு, முதல்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அதே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு 2ஆவது முறையாக மக்களவை எம்பி-ஆனார்.


தொடர்ந்து தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் கனிமொழிக்கு சமீபத்தில்தான் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. மாநில அரசியலில் தனது மகன் உதயநிதிக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே கனிமொழியை தேசிய அரசியலில் ஸ்டாலின் ஈடுபடுத்தி வருவதாக பேசப்பட்டு வருகிறது.