கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து அதிமுகவை சேர்ந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அருண்மொழிதேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான பாண்டியன், மற்றும் அதிமுகவை சேர்ந்த ஒன்றியக் குழு சேர்மன்கள், மாவட்ட குழு சேர்மன் உள்ளிட்ட பலர் மனு ஒன்றை அளித்தனர். 

 



 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அருண்மொழிதேவன் கூறுகையில், திமுக ஆளுங்கட்சியாக வந்தவுடன் கடலூர் மாவட்டத்தில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அத்து மீறி அதிகாரம் செலுத்தி அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் மிரட்டி வருவதுடன் வளர்ச்சிப் பணிகளில் குறுக்கீடு செய்து வருகின்றனர். மேலும் ஊராட்சி ஒன்றிய தீர்மானம் மூலம் தேர்வு செய்யப்படும் பணிகளில் திமுக நிர்வாகிகள் எல்லா விஷயங்களிலும் தலையிட்டு அதிகாரிகளை மிரட்டி வருவதால் மக்கள் பணியினை தங்களால் சரிவர செய்ய முடியவில்லை, இது மட்டும் இன்றி அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்களை பணத்தாசை காட்டி திமுகவில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 



 

மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசு அதிகாரிகளின் துணையோடு நிறைவேற்றுவோம் என்று மிரட்டியும் திமுகவில் சேர தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் என்று சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் மீது குற்றச்சாட்டி கடந்த 27 ஆம் தேதி விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி திமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் A.M.P.முத்துகண்ணு, மற்றும் 13 ஒன்றியகுழு வார்டு உறுப்பினர்கள் மனு கொடுத்தனர்.



 

இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ஆன வள்ளி சந்திரசேகர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், கோட்டாட்சியர் இடம் அளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்காக தன் பெயரில் கொடுக்கப்பட்ட லெட்டர் பேட் தனது லெட்டர் பேட் இல்லை எனவும் மற்றும் அதில் போடப்பட்டு இருக்கும் கையெழுத்தும் போலியானது என்றும், தனது பெயரை பயன்படுத்தி விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்துள்ள கடிதம் போலியானது அதிலும் தான் கையொப்பம் இடவில்லை என கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.