துணைவேந்தர் நியமனம்: இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல! - துரைமுருகன் கண்டனம்..

உலக புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகம் எப்படி சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதை பல்வேறு ஊடகங்கள் எடுத்துக்காட்டி இருக்கிறது என்று துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பல்வேறு பல்கலைக்கழக துணை வேந்தர்களின் பெயர்களை ஆளுநர் அவசர அவசரமாக வெளியிட்டிருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார். 

Continues below advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொதுத்தேர்தல் 06.4.2021 அன்று நடந்து முடிந்திருக்கிறது. ஆட்சிமன்றத்துக்கான சூழலை இந்த தேர்தல் உருவாக்கிருக்கின்ற நல் தருணம் இது. புதிய அரசு பல புதிய சிந்தனை திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிக தெளிவாக தெரிகிறது. 26.04.2021 அன்று வாக்கு எண்ணிக்கை எண்ணி முடிக்கப்பட்டிருந்தால், இந்த நேரம், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பதவி ஏற்றிருக்கும். ஆனால் ஓட்டு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட இந்த ஒரு மாதம் காலம் எந்த முடிவு எடுக்காமல் இருப்பதுதான் மரபு.

புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அதன் நிர்வாகப் பொறுப்பை பல ஆண்டுகளுக்கு ஏற்கப்போகும் துணை வேந்தர்களின் பெயர்களை ஆளுநர் அவசர அவசரமாக வெளியிட்டிருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.

1.         காந்திராம கிராமிய பல்கலைக்கழக துணை வேந்தராக - எஸ். மாதேஸ்வரன்,

2.         கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் செல்வகுமார்

இவை இரண்டும் ஆளுநர் அறிவித்ததாக செய்தித்தாள்களில் வெளிவந்த அறிவிப்புகள்.

பல நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த இந்த பதவிகளை புதிய அரசு வந்து நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்து விடும்? இந்த இரண்டு போதாது என்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக, கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்கிற்கு நியமித்து இருக்கிறது.

தேர்தல் வருவதற்கு முன்பு இருந்த நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவை. இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்று ஆயிரம் காரணங்களை ஆளுநர் மாளிகை கூறினாலும், பொறுத்ததுதான் பொறுத்தீர் இன்னும் ஏன் ஒரு மாத காலம் பொறுக்கக்கூடாது என்பதுதான் எமது கேள்வி. முறையான துணை வேந்தர்களை நியமிக்காததால், அகில உலக புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகம் எப்படி சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதை பல்வேறு ஊடகங்கள் எடுத்துக்காட்டி இருக்கிறது. முடிந்தால் ஆளுநரின் செயலாளர்கள் ஆளுநர் பார்வைக்கு கொண்டு செல்லட்டும்.

இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல!” - என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement