சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் அரசியல் சதுரங்கம் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், நேற்று திமுக கூட்டணியில் முதன்முறையாக தேமுதிக கை கோர்த்துள்ளது. 

Continues below advertisement

10 சதவீதம் வைத்திருந்த தேமுதிக:

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு நிகரான நடிகராக உலா வந்தவர் விஜயகாந்த். கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோதே தேமுதிக-வைத் தொடங்கி 10 சதவீதம் வாக்குகள் வரை பெற்றவர். கடந்த அரைநூற்றாண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி இருந்த திமுக-வை பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற கட்சி தேமுதிக. 

திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்?

ஆனால், விஜயகாந்த் உடல்நலம் குன்றிய பிறகு தேமுதிக பரிதாப நிலைக்குச் சென்றது. 2016ம் ஆண்டு, 2021 சட்டமன்ற தேர்தலில் மோசமான தோல்வி, 2019 மற்றும் 2024 சட்டமன்ற தேர்தலில் மோசமான தோல்வி காரணமாக தேமுதிக-வின் வாக்கு சதவீதம் தற்போது 2 சதவீதமாக உள்ளது. 

Continues below advertisement

விஜயகாந்த் இருந்தபோது பெற்ற முரசு சின்னத்தை தக்க வைக்கவும், மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெறவும் தேமுதிக வரும் தேர்தலில் குறைந்தது குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், குறிப்பிட்ட அளவிலான வாக்கு சதவீதமும் பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது.  வரும் தேர்தலிலும் திமுக-விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்துக்கணிப்பு இருப்பதால் இந்த முறை திமுக பக்கம்  தேமுதிக சாய்ந்துள்ளது.

எத்தனை தொகுதிகள்:

தற்போது திமுக கூட்டணிக்குள் தேமுதிக வந்திருப்பதால், காங்கிரஸ் அதிக தொகுதி ஒதுக்கீடு என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு வாய்ப்பே இல்லை. தற்போது வரை திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக-விற்கு 6 தொகுதிகள் வழங்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 

இதற்கான பேச்சுவார்த்தை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் எ.வ.வேலுவை தேமுதிக பொருளாளர் சுதீஷ் இதற்காக 6 முறை நேரில் சென்று சந்தித்தாகவும் கூறப்படுகிறது. 

இரட்டை இலக்கத்தில் கிடைக்குமா?

ஒருவேளை, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் காங்கிரசுக்கு கடந்த தேர்தலில் வழங்கிய 25 தொகுதிகளில் சிலவற்றை கூட்டணி கட்சிகளுக்கு திமுக வழங்கும் என்று கருதப்படுகிறது. அவ்வாறு வழங்கினால் தேமுதிக-விற்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

தேமுதிக-வின் தேர்தல் செலவுகளையும் திமுக-வே ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால் எந்தெந்த தொகுதிகளை கேட்கலாம்? என்று பிரேமலதா தரப்பினர் தீவிரமாக பட்டியலைத் தயார் செய்து வருகின்றனர். மேலும், காங்கிரஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  

தேமுதிக-வின் 50க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் திமுக-வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்ததாகவே கூறப்படுகிறது. இந்த தேர்தலில் தேமுதிக சார்பில் பிரேமலதா போட்டியிடுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விஜயபிரபாகரன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.