தனது அரசியல் வாழ்வில் கிட்டத்தட்ட தனித்து விடப்பட்டுள்ளார் முன்னாள் முதலமைச்சரும், ஜெயலலிதாவின்  தீவிர விசுவாசியாக கருதப்படுபவருமான ஓ. பன்னீர்செல்வம். அதிமுக மீண்டும் சேர்ந்துவிட வேண்டும் என்று எவ்வளவோ முயன்றும், அது முடியாமல் போனதால், தற்போது அதிரடியாக ஒரு முடிவை அவர் எடுத்துள்ளது போல தெரிகிறது. ஆம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்திய அவர், மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதாக பேட்டி அளித்துள்ளார். இதனால், அவர் திமுகவில் இணைய உள்ளாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அவரது பேட்டி குறித்து இப்போது பார்ப்போம்.

Continues below advertisement

பேரவையில் அச்சாரம் போட்ட ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் 2 நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில், இன்று பேரவையில் பேசிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவு அதிமுக எம்எல்ஏ ஐய்யப்பன், வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும்  வெற்றி பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் வர வேண்டும் என்று கூறினார்.

மேலும், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆசியோடும், புரட்சித் தலைவி அம்மா ஆசியோடும், மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் வர வேண்டும் என்று அவரை வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

Continues below advertisement

மீண்டும் திமுக ஆட்சி என்று அதிரடியாக பேட்டி அளித்த ஓ. பன்னீர்செல்வம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னிர்செல்வம் பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். அதைத் தொடர்ந்து அவர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, 5 ஆண்டுகால திமுக ஆட்சி சிறப்பாக இருந்ததாக கூறிய அவர், அதற்காக வாழ்த்து தெரிவிக்கவே காலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததாக தெரிவித்தார். மேலும், திமுக-வின் 5 ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்ததால், அவர்களே மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழல் தமிழகத்தில் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

அதோடு, எம்எல்ஏ ஐய்யப்பன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் நினைப்பதைத் தான் தனது ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசினார் என தெரிவித்தார்.

தொடர்ந்து, திமுக-வில் இணைவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். இதனால், அவர் திமுகவில் இணைய உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

அரசியலில் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்படும் ஓ. பன்னிர்செல்வம், அவராலேயே முதலமைச்சர் ஆக்கப்பட்டவர். 3 முறை முதலமைச்சராக இருந்த அவர், ஜெயலலிதாவின் இறப்பிற்குப் பிறகு அதிமுகவிலிருந்து தூக்கி வீசப்பட்டார். தர்ம யுத்தம் எல்லாம் நடத்தி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், எவ்வளவோ முயன்றும் இன்று வரை மீண்டும் அதிமுகவில் இணைய முடியவில்லை.

மறுபுறம், தனி கட்சி தொடங்காமல், உரிமை மீட்புக் குழு என்று ஒன்றை அமைத்து போராடி வந்தார். ஆனால் அவருக்கு கிடைத்தது என்னவோ தோல்வி தான். அவரிடம் இருந்த ஆதரவாளர்களும் ஒவ்வொருவராக பிய்த்துக் கொண்டு பல்வேறு இடங்களில் ஐக்கியமாகி விட்டனர். அவரிடம் மிஞ்சியிருப்பது இந்த எம்எல்ஏ ஐயப்பன் ஒருவர் தான்.

இப்படி எந்த பக்கமும் போக முடியாமல் தனித்து விடப்பட்டதாலேயே, திமுகவில் இணையும் அதிரடி முடிவை அவர் எடுத்துவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கான விடை விரைவில் தெரிந்துவிடும் என்று நம்புவோம்.