வறுமையும், பசியையும் விட .. மறைந்த நடிகர் விவேக் குறித்து திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் நினைவுகூர்ந்து பதிவு..

"எழில்.. ஒரு மனிதனின் வாழ்க்கையில் வறுமையும் பசியை விட .. சிறந்த ஆசிரியர்கள் இருக்கமுடியாது” எனக் கூறியதாக தெரிவித்திருக்கிறார் மருத்துவர் எழிலன்.

Continues below advertisement

2021 சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக வேட்பாளரான மருத்துவர் எழிலன் நாகநாதன் நடிகர் விவேக்கின் மிக வலிமையான வரிகளை நினைவுகூர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார்.

Continues below advertisement

மருத்துவர் எழிலன் தனது பதிவில், ”நான் அப்போது எழும்பூர் தொன்போஸ்கொ பள்ளியில் 12 வகுப்பு படித்து கொண்டுஇருந்தேன்.நான் பள்ளியின் கலைப்பிரிவின் தலைவர்.நாடக போட்டிக்காக திரு விவேக் அவர்களை தலைமை தாங்க அழைத்திருந்தேன்‌. திரைத்துறையில் அவர் உச்சத்தில் இருந்த காலகட்டம்.ஆனால் மூன்று மணி நேரம் மாணவர்களின் நாடகங்களை கண்டு அவர்களின் திறமையை உற்சாகப்படுத்தி பரிசுகளை வழங்கினார். அவரின் எளிமையை கண்டு வியந்தேன். அவர் எனக்கு சொன்ன வரிகள் இன்னும் எனக்கு கேட்டு கொண்டே இருக்கிறது. "எழில் ...ஒரு மனிதனின் வாழ்க்கையில் வறுமையும் பசியை விட ... சிறந்த ஆசிரியர்கள் இருக்க முடியாது” எனக் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.
 
<div class="fb-post" data-href="https://www.facebook.com/ezhilan.naganathan/posts/10218348473159040" data-width="500" data-show-text="true"><blockquote cite="https://www.facebook.com/ezhilan.naganathan/posts/10218348473159040" class="fb-xfbml-parse-ignore"><p>நான் அப்போது எழும்பூர் தொன்போஸ்கொ  பள்ளியில் 12 வகுப்பு படித்து கொண்டுஇருந்தேன்.நான் பள்ளியின் கலைப்பிரிவின் தலைவர்.நாடக...</p>Posted by <a href="#" role="button">Ezhilan Naganathan</a> on&nbsp;<a href="https://www.facebook.com/ezhilan.naganathan/posts/10218348473159040">Friday, April 16, 2021</a></blockquote></div>

இதேவகையில், "எனக்கு காரியம் செய்வார் என நினைத்த விவேக்கிற்கு இப்படி ஆகிவிட்டேதே" என அவரது தமிழ் ஆசிரியர் சாலமன் பாப்பையா ABP நாடு இணையதளத்திற்கு கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

மதுரையில் இருந்த சாலமன் பாப்பையாவிடம் விவேக் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள் என நாம் தொலைபேசியில் கேட்ட போதே, அவரின் குரல் உடைந்துவிட்டது. அவரை தேற்றி பேச வைத்தோம். ‛"சின்ன கலைவாணர் விவேக் ஒரு சிறந்த நடிகர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில மூன்றாண்டுகள் படித்தவர். அப்படி படிக்கும்போது ஓர் வருசம் என்னிடம் படித்தார். இந்த தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் மன இருளை போக்கியதில் அவருக்கு பெரும்பங்குண்டு. குறுகிய காலத்தில் சீர்திருத்த அலைகளை மக்கள் மத்தியில் பரப்புனவரு. பகுத்தறிவு இயக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து’’ என, பாப்பையா சொல்லும்போதே உடைந்த அவரது குரல் பெருமையில் திளைக்கிறது.

‛‛அவரு யாரையும் புண்படுத்திட மாட்டாருங்க,  பிறருடைய மனம் வருந்தாமல் அறிவார்ந்த கருத்துகளை சொல்றதுல அவருக்கு நிகர் யாரும் இல்லீங்க. என்.எஸ்.கே.க்கு பின்னாடி சின்னக்கலைவாணர் அப்படிங்கிற பட்டம் அவருக்கு அவ்வளவு பொருந்திபோனது. எல்லா மனுஷங்ககிட்டயும் அன்பா பழகுவாரு. எங்க வீட்டுக்கெல்லாம் வந்திருக்கிறார். என்னுடைய ஸ்டுடண்ட்  அல்லவா, அதனால என் மீது மிகுந்த அன்பும், பிரியமும் வச்சுருந்தாரு,’’ என்று சொல்லி அமைதியாகிறார். சில நொடி இடைவெளிக்குபிறகு, ‛‛எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டபோது தொலைபேசியில் வந்த முதல் வாழ்த்து விவேக்கோடதுதான். விவேக் இருந்து எங்களுக்குக்கெல்லாம் காரியம் செய்வாருன்னு நெனச்சன். ஆனா, இந்த சின்ன வயதுலயே அவர் காலமானதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை,’’ என சொல்லும்போதே உடைந்து அழுதுவிட்டார் பாப்பையா.

‛‛விவேக் மனசுல ஏதோ சோகம் இருந்துருக்குங்க. தனது மகனின் இழப்பை அவரால தாங்கிக்கவே முடியல . அந்த தக்கத்தை தாங்கமுடியாமதான் அவன தேடி அங்கேயோ போய்ட்டாரோ என்னவோ. அவரு இழப்பு திரைத்துறைக்கு மட்டுமில்லைங்க, பகுத்தறிவு இயக்கத்திற்கு நல்ல நண்பர்களுக்கு, பழக்கத்திற்குகான, இந்த தமிழகத்திற்கே பேரிழப்பு. இறை அவரது ஆன்மாவிற்கு அமைதி தரவேண்டும்" என துக்கம் தனது குரலை பேசி முடித்துக்கொண்டார் பாப்பையா. 

Continues below advertisement