தொண்டர்களும் நிர்வாகிகளும் பக்கபலமாக இருப்பதாக சமீபத்தில் தேமுதிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, ”கேப்டன், தொண்டர்கள் என அனைவரும் உடன் இருப்பதால் நான் எந்த சவால்களையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். சினிமாவில் இருக்கும் வரை எல்லாராலும் விரும்பக்கூடியவராக இருந்தார். அரசியலுக்குள் எப்போது நுழைந்தோமோ அப்போது எல்லோரும் எதிரியாக மாறிவிட்டனர். நானும் கேப்டனும் பல்வேறு சவால்களை, இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளோம். திரையுலகிலும் சரி அரசியலிலும் சரி கேப்டன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எதிர் நீச்சல் போட்டு தான் வெற்றியடைந்துள்ளார். கேப்டன் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்ட போது தான் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தற்போது எல்லோருக்கும் இருக்கும் ஐயம் என்னவென்றால் இதை எப்படி வழிநடத்தப்போகிறோம் என்பது தான்.


ஆனால் ஒவ்வொரு நாளும் கேப்டனில் ஆணைக்கிணங்க ஆசிர்வாதத்துடன் தான் வழிநடத்தி வருகிறோம். இப்போது கூட கேப்டன் நேரலையில் நான் அளிக்கும் பேட்டியை பார்த்துகொண்டுதான் இருக்கிறார். கட்சி தொடங்கிய காலம் முதல் தற்போது வரை 100 ஆண்டுகால அனுபவத்தை பெற்றுள்ளோம். இந்த அனுபவத்தின்படி நாங்கள் கட்சியை வழிநடத்துவோம். எனக்கு அரசியலில் ரோல் மாடல் புரட்சி தலைவி ஜெயலலிதா தான். அவர் சந்திக்காத சவால்களே இல்லை. பல சவால்களை சந்தித்து வெற்றியும் பெற்றுள்ளார்” என தெரிவித்துளார்.