தமிழ்நாட்டின் சிங்கம் விஜயகாந்த் என பிரதமர் மோடி எப்போதும் கூறுவார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருக்கு இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. ‘தமிழகத்தின் சிங்கம்’ என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார். அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பிரேமலதா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தேமுதிகவையும் இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அதிமுக பாஜக கூட்டணி உருவாகியுள்ள நிலையில் பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
முன்னதாக மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என பிரேமலதா அறிவித்திருந்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா அதை டிவியில் பார்த்து தெரிந்துகொண்டதாகவும் அது அவர்களின் முடிவு எனவும் தெரிவித்தார். அது பற்றி கருத்து சொல்ல முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தங்கள் கட்சியை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.