Diwali Wishes Governor: அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 


நாளை (நவம்பர் 12) இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க கடைவீதிகளில் குவிந்துள்ளதால் தீபாவளி வியாபாரமும் களைகட்டியுள்ளது. இப்படியான நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழில் பேசி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.


ஆளுநர் ஆர்.என்.ரவி:


அதில் அவர் கூறியிருப்பதாவது, ”ஒளியின் திருநாளான தீபாவளித் திருநாளில் எனது அன்புக்குரிய தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் இவ்விழா, அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” அல்லது “வசுதெய்வ குடும்பகம்” என்ற நமது சனாதன தத்துவத்தின் இலட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு இது. உலகெங்கிலும் உள்ள பாரதவாசிகள், மதம் அல்லது மொழி வேறுபாடின்றி ஒரே குடும்பமாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.


நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஆத்மநிர்பர் பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும்  “Vocal for Local” ஆக வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் பிற பரிசுகளை வாங்க உறுதிமொழி எடுப்போம். சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூரில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி வேலை செய்யும் தொழிற் சாலைகளுக்குச் சென்று, நம் தீபாவளியை ஒளிரச் செய்ய பெண் தொழிலாளர்களின் உழைப்பை நேரில் பார்த்தேன்.


உள்நாட்டில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வாங்கி அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்வோம் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம். அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.


எடப்பாடி பழனிசாமி:


எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.


தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்; மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்கொள்கிறேன்” என்றார்.