தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே இனிப்பு வகைகள் தான் களை கட்டும். வடக்கில் சொல்லவே வேண்டாம் வீடுகளில் செய்வது போக கடைகளில் பல்வேறு அதிகமான அளவு இனிப்பு வகைகளை வாங்கும் பழக்கம் உள்ளது. தமிழகத்திலும் சமீப காலமாக கடைகளில் இனிப்பு வகைகளை வாங்கி பகிர்ந்துகொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பண்டிகை காலங்களில் கடைகள், உணவகங்கள் இனிப்பு கார வகைகளை தரமாக விற்பனை செய்கின்றனவா என்ற ஆய்வை FSSAI எஃப்எஸ்எஸ்ஏஐ அமைப்பு கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. 


தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள இனிப்பு கடைகள் விற்பனையகங்களில் இந்த கண்காணிப்பு அதிகரித்துள்ளது. இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கூறுகையில், தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இனிப்பு, கார விற்பனையில் ஈடுபடும் கடைகள், குடிசைத் தொழிலகங்கள், பண்டு பிடித்து இனிப்பு வழங்குபவர்கள் என்ற அனைவருமே FSSAI எஃப்எஸ்எஸ்ஏஐ விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய லைசன்ஸ் பெற்றே செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கலப்பட்டமற்ற மூலப் பொருட்கள் கொண்டு தரமான வகையில் பலகாரங்களை செய்ய வேண்டும். விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட நிறமூட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பேக்கட்டுகளில் பலகாரத்திற்கான எக்ஸ்பைரி டேட் அதாவது காலாவதியாகும் தேதி கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் FSSAI எஃப்எஸ்எஸ்ஏஐ லைசன்ஸ் மற்றும் பேட்ச் நம்பர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றார். மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெய்யையே பயன்படுத்துவதும் குற்றமாகும் என்று எஃப்டிஏ துறை அதிகாரி டாக்டர் ஆர்.ரமேஷ் பாபு எச்சரித்துள்ளார்.


அதேபோல் சில பலகாரக் கடைகளில் சூரியகாந்தி எண்ணெய்க்குப் பதிலாக பாமாயில் பயன்படுத்துகின்றனர். ஆகையால் தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும். திருச்சியில் மட்டும் 1000 உற்பத்தியாளர்கள் முறையான அனுமதியின்றி செயல்படுவது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.


தரமற்ற இனிப்பு காரங்கள் விற்பனை செய்யப்படுவது அறிந்தால் திருச்சி வாழ் மக்கள் 9944959595, 9585959595 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது  9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.  இது தவிர திருச்சி உணவுப் பாதுகாப்பு துறை எண்களான 9944959595, 9585959595 ஆகியனவற்றையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எஃப்எஸ்எஸ்ஏஐ என்ற உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் என்பது இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளில் ஒன்று. இந்த அமைப்பின் முதன்மை நோக்கம் சட்டங்களை வகுத்து, பாதுகாப்பான உணவை வழங்கி மக்களின் நலத்தைக் காப்பது ஆகும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டம், 2006 என்ற சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.  இதன் தலைமையகம் புது தில்லியிலும், துணை அலுவலகங்கள் கவுகாத்தி, கொல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் உள்ளன. இவ்வமைப்புக்கு 4 பரிந்துரை ஆய்வுக்கூடங்களும் 72 ஆய்வுக்கூடங்களும் உள்ளன. இந்த உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையமானது அவ்வப்போது உணவு தரத்தை கண்காணித்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உணவில் கலப்படம் உள்ளிட்ட குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் கடுமையான தண்டனைகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.