Ditwah Cyclone விழுப்புரம் : டிட்வா புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் மரக்காணம் பகுதியில் உள்ள 3,500 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
‘டிட்வா' புயல் Ditwah Cyclone Update:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக இருந்தது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் ‘டிட்வா' புயல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை 11.30 மணியளவில் புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயலுக்கு ‘டிட்வா' என பெயரிடப்பட்டு உள்ளது.
3,500 ஏக்கர் நிலத்தில் உற்பத்தி பதிப்பு
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணாமாக மரக்காணம் பகுதியில் உள்ள 3,500 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கியது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமாக சுமார் 3,500 ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்யும் உப்பளங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வேதாரண்யம், தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் மரக்காணம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இத்தொழிலை நம்பி சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. தற்பொழுது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் உப்பு உற்பத்திக்கான பாத்திகள் மறைந்து, உப்பளங்களில் நிகழாண்டில் உப்பு உற்பத்திக்கு மழை முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக, தொழிலாளா்கள் தெரிவித்தனா். இந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களும் போதிய வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். எனவே அரசு சார்பில் வழங்கப்படும் மழைக்கால நிவாரண உதவித்தொகையை அனைத்து உப்பள தொழிலாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை நெருங்கும் புயல் Chennai Rains Live Updates and forecast
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் தற்போது சென்னைக்கு தெற்கு - தென் கிழக்கில் 220 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது புயல் இன்று மாலைக்குள் சென்னை - புதுச்சேரி கடற்கரையை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் தற்போது தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்த்து வருகிறது. டிட்வா புயல் தற்போது காரைக்காலில் இருந்து கிழக்கு - வடகிழக்கில் 90 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து வடகிழக்கில் 120 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென் கிழக்கில் 130 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென் கிழக்கில் 220 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி கடற்கரைக்கு பக்கவாட்டில் முன்னேறுகிறது. இது இன்று மதியம் அல்லது மாலைக்குள் தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை ஒட்டிய பகுதியில் 70 கிமீ தொலைவிலிருந்து 30 கிமீ தொலைவுக்குள் நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.