Ditwah Cyclone News Chengalpattu: "செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது"

Continues below advertisement


வடகிழக்கு பருவமழை 2025 - Ditwah Cyclone News


வடகிழக்கு பருவமழை 2025 காரணமாக டிட்வா புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் புதுச்சேரியில் கரையை கடக்குமென்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இந்த புயலினால் பாதிப்புகள் அதிகளவில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் விரிவான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.


செங்கல்பட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன ? Chengalpattu Weather 


பொதுமக்களை பாதுகாக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 54 இடங்களில் சமூக சமையளறைகள் தயார் நிலையில் உள்ளன. மின்வாரியம் மூலம் மின்கம்பங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் போதுமான அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அவசர சூழ்நிலையில் மக்கள் தங்குவதற்காக 287 வெள்ள நிவாரண முகாம்கள் 20 புயல் பாதுகாப்பு மையங்களும் தயார்நிலையில் உள்ளன. 


கூடுதலாக கானாத்தூர் நெம்மேலி பட்டிபுலம் ஆகிய இடங்களில் 3 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களும் செயல்பாட்டில் உள்ளன. தாம்பரம் மாநகராட்சி முடிச்சூரில் 30 நபர்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. மேலும் கூடுவாஞ்சேரியில் 25 நபர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 390 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 


அதிகளவு பாதிக்கக்கூடிய இடங்கள்? 


இதில் மிக அதிகளவில் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 71 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான படகுகள், இயந்திரப்படகுகள், மர அறுவை இயந்திங்கள், நீர் இரைக்கும் இயந்திரங்கள், ஜேசிபி, கிரேன், மின்னாக்கிகள், பரிசல், டிராக்டர், ஆகியவை தயார் நிலையில் உள்ளன.


மேலும் வெள்ள நீர் தடுப்பு பணிகளுக்காக மணல் மூட்டைகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மருத்துவமனைகளுக்கு முன்னறிவிப்பு என்ன ? - Instructions for hospitals 


மருத்துவமனைகளில் மின்னாக்கிகள் (ஜெனரேட்டர்கள்) தயார் நிலையில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 முதல் 5 நாட்களுக்குள் பிரசவிக்கும் கர்ப்பிணி பெண்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே மருத்துவமனைகளில் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 33 மண்டல அளவிலான பல்துறை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


அவசர உதவி எண்கள் Helpline numbers 


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால கட்டுப்பாட்டு அறை (24x7) அடிப்படையில் இயங்கிவருகிறது.   பொதுமக்கள் டிட்வா புயலினால் பாதிப்பு ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு மழை மற்றும் புயலினால் ஏற்படும் புகார்களை தெரிவிக்கலாம்.


கட்டணமில்லா தொலைபேசி எண்:


1077


தொலைபேசி:


044-27427412


044- 27427414


வாட்ஸ் ஆப் எண்:


9444272345


மேலும் வழங்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்ணில் வெள்ள அபாயங்கள் / சேதங்கள் குறித்த புகைப்படங்களை அனுப்பி புகார் அளிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தெரிவித்துள்ளார்.