விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் அது புயலாக மாறி சென்னை அருகே இன்று வியாழக்கிழமை கரையை கடக்கும் என்பதால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயல் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார், தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
இவர்களுடன் மாநில அளவில் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 57 போலீசாரும், சிறப்பு காவல் படையினர் 60 பேரும் அடங்கிய பேரிடர் மீட்புக்குழுவினரும் இணைந்து புயலால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட தலைமையிடமான காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில் 2 குழுக்களும், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய 4 உட்கோட்டங்களில் தலா ஒரு குழுவும், கடலோர பகுதியான மரக்காணத்தில் தனியாக ஒரு சிறப்பு குழுவும் என 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அவசர கால மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், டயர் டியூப்கள், கயிறு, பொக்லைன் எந்திரம், ஜெனரேட்டர், மரம் வெட்டும் எந்திரங்கள், மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட பல்வேறு மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளான மரக்காணம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தனித்தனி குழுக்களாக முகாமிட்டு தங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடலோர பகுதியில் அழகன் குப்பம், வசவன் குப்பம், கைப்பாணிக் குப்பம், எக்கியர் குப்பம், புதுக்குப்பம், அனுமந்தை குப்பம், கூனிமேடு குப்பம், முதலியார் குப்பம் உள்ளிட்ட 19 மீனவர் குப்பங்கள் உள்ளன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மேடான பகுதிக்கு டிராக்டர் மூலம் கட்டி இழுத்து செல்கின்றன. மகாபலிபுரம் அருகேகரையைக் கடப்பதால் மரக்காணம் பகுதியில் அதிக அளவில் கடல்சீற்றம் இருக்கின்ற காரணத்தினால் மீனவர்கள் வலைகளையும் பைபர் படகுகளையும் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்