தமிழ்நாடு முழுவதும் ஊடகங்கள், மக்கள் அறிந்த ஐபிஎஸ் அதிகாரிகள் வெகுசிலர்தான். அவர்களில் முக்கியமானவர் திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார். திருச்சி எஸ்.பியாக இருந்து பல்வேறு சம்பவம் செய்த அவரை, டி.ஐ.ஜியாக பதவி உயர்த்திய பிறகு அதே திருச்சி சரகத்திற்கு டி.ஐ.ஜியாக அமர்த்தியது தமிழ்நாடு அரசு.
இந்நிலையில், அவரை சென்னை மாநகர காவல்துறைக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெறுவதாகவும் அவருக்கான புதிய அசைன்மென்ட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் – வருண் பெயர் ஏன் இல்லை ?
சமீபத்தில் ஐ.ஜி., டி.ஐ.ஜி, எஸ்.பி. அந்தஸ்தில் இருந்த 33 அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த பணியிடமாற்ற பட்டியலில் திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் பெயரும் வரவிருந்ததாகவும், அவரை சரியான இடத்தில் பணியமர்த்த வேண்டும் என்ற ஆலோசனையை பெறுவதற்காக பட்டியலில் அவர் பெயர் அப்போது இடம்பெறவில்லையென்றும் கூறப்பட்டது.
சென்னை மாநகர காவல்துறைக்கு வருகிறாரா வருண்குமார் ஐபிஎஸ்?
இந்நிலையில், வருண்குமாரை சென்னை மாநகர காவல்துறை பணியில் ஈடுபடுத்த ஆணையர் அருண் விரும்புவதாகவும் அவருக்கு முக்கியமான பணியிடத்தை அவர் கொடுக்க நினைப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
குறிப்பாக, சென்னை மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவில் இணை ஆணையராக பணியாற்றிய தர்மராஜன் ஐபிஎஸ், வேலூர் சரக டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு வேறு யாரும் இதுவரை பணியமர்த்தப்படவில்லை. சென்னை காவல்துறையின் முக்கிய பிரிவாக செயல்படும் நுண்ணறிவு பிரிவு எனும் உளவுத்துறையின் முக்கிய பணியிடமாக இணை ஆணையர் பதவி என்பது நெருப்பின் மீது நடப்பது போன்ற அனல் தகிக்கும் பொறுப்பு என்பதாலும் அதில் சிறு பிசகு ஏற்பட்டாலும் மொத்த காவல்துறைக்கும் சறுக்கல் ஏற்பட்டுவிடும் என்பதாலும் அந்த பொறுப்புக்கு தர்மராஜன் மாதிரி சிறப்பாக செயல்படக் கூடிய இன்னொரு அதிகாரியை நியமிக்க சென்னை காவல் ஆணையர் அருண் ஆலோசித்து வந்த நிலையில், அந்த இடத்திற்கு திருச்சி டி.ஐ.ஜியாக பணியாற்றும் வருண்குமார் ஐபிஎஸ்-சை நியமிக்க முடிவெடுத்து, அது குறித்து பரிந்துரையை காவல் ஆணையர் அருண் செய்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இணை ஆணையர் நுண்ணறிவு பிரிவு அல்லது தெற்கு மண்டல இணை ஆணையர்
ஒருவேளை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராக வருண்குமார் நியமிக்கப்படாமல்போனால், அவர் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், தற்போது தெற்கு மண்டல இணை ஆணையராக இருக்கும் கல்யாண், வேறு ஒரு முக்கிய இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
ஆபரேஷன் TVK ; இதுதான் Assignment ?
லாக்கப் மரணங்களுக்கு எதிராக சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையால் இறந்ததாக கூறப்படும் 24 பேரின் குடும்பங்களை மேடையில் ஏற்றி, விஜயும் மேடை ஏறி பேசிய சம்பவத்திற்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து, அவர்களின் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கட்டை போடும் விதமாக சில வியூகங்களை காவல்துறை மூலம் திமுக அரசு மேற்கொள்ளப்பவதாகவும், அதனை கனக்கச்சிதமாக வருண்குமார் செய்வார் என்பதால் சென்னையில் அவருக்கு முக்கிய போஸ்டிங் போடப்படவுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.