காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட ஆட்சியர் கே.சாந்தி தடை விதித்துள்ளார்.


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 5000 கன அடியிலிருந்து 11000 கன அடியாக அதிகரித்துள்ளது.




தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 20,000 கன அடி வரை அதிகரித்தது. தொடர்ந்து மழை குறைந்ததால், 16,000, 9,000, 6,000 என படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் என மாறி மாறி வந்தது. ஆனால் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக  நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வந்தது. இந்நிலையில் தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4000 கன அடியிலிருந்த நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரித்தது.




தொடர்ந்து காவிரி ஆற்றை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில், தளி, தேன்கணிக்கோட்டை, நாற்றம்பள்ளி, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், நீர்வரத்து மேலும் அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 11000 கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், இன்று விடுமுறை தினம் என்பதால், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்பிருந்தது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட ஆட்சியர் கே.சாந்தி தடை விதித்துள்ளார்.




தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால், நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து நீர்வரத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் காவிரி ஆற்றங்கரையோரம் ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல் பகுதிகளில் காவல், தீயணைப்பு, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண