கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாவூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் இன்று பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சாலை மறியலில் ஈடுப்பட்ட போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அப்போது போராட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாக மாறியது. காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில், பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளியில் இருந்த பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போராட்டகாரர்கள் பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர். 


 நிலைமையை கட்டுப்படுத்த கள்ளக்குறிச்சி தாலுகா, சின்ன சேலம், நைனார் பாளையம் ஆகிய இடங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.  மேலும் சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட்டக்காரர்களை அமைதி காக்குமாறும், உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன் எனவும் தெரிவித்தார். 


அதன்படி வன்முறை நடந்த இடத்தை உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் பேசிய உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி, கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்து சரியான முடிவுக்கு வரவேண்டியுள்ளது. பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


தொடர்ந்து பேசிய டிஜிபி சைலேந்திர பாபு,  காவல்துறையைச் சேர்ந்த டிஐஜி, எஸ்.பி. மற்றும் 52 காவலர்களுக்கு வன்முறை சம்பவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கு மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் செய்தவர்கள் வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். 


என்ன நடந்தது? 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கி பயின்று வந்த விடுமுறை நாட்களில் பெற்றோரை சந்திக்க செல்வார். இந்நிலையில் ஜூலை 13 ம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கண்ட விடுதி காவலர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.


இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாணவி பள்ளி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து சின்னசேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


மாணவியின் பிரேதத்தை உடற் கூறாய்வு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவியின் உடலை வாங்க மறுத்து இன்று மாணவி உயிரிழந்தது தொடர்பாக நீதி கிடைக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண