கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தில் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கி பயின்று வந்த விடுமுறை நாட்களில் பெற்றோரை சந்திக்க செல்வார். இந்நிலையில் ஜூலை 13 ம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கண்ட விடுதி காவலர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.


இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாணவி பள்ளி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து சின்னசேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






மாணவியின் பிரேதத்தை உடற் கூறாய்வு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவியின் உடலை வாங்க மறுத்து இன்று மாணவி உயிரிழந்தது தொடர்பாக நீதி கிடைக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சாலை மறியலில் ஈடுப்பட்ட போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அப்போது போராட்டம் சிறிது நேரத்தில் கலவரமாக மாறி மாணவியின் உறவினர்கள் காவல்துறை வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.  போராட்டக்காரர்களை கட்டுபடுத்த காவல்துறையினர் தடியடி நடத்த தொடங்கினர். 


இதனிடையே நிலைமையை கட்டுப்படுத்த கள்ளக்குறிச்சி தாலுகா, சின்ன சேலம், நைனார் பாளையம் ஆகிய இடங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி மர்ம மரண விவகாரத்தில், மாணவி தற்கொலை செய்த நாள் முதல் இப்போது வரை போலீசாரின் விசாரணைக்கு பள்ளி நிர்வாகம்,ஆசிரியர் என அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


மேலும் அந்த வீடியோவில் இந்த சம்பவத்தில் எதையும் நாங்கள் மறைக்கவில்லை. ஸ்ரீமதியின் அம்மா செல்வி எங்களை பார்க்கவில்லை என கூறினார்கள். நாங்கள் காவல்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளோம். அப்படி இருக்கையில் சமூக வலைத்தளத்தில் பொய் தகவலை பரப்பி இன்னைக்கு இப்படி வன்முறையை ஏன் ஏற்படுத்த காரணம் என்ன?. பள்ளி மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தி 1998 ஆம் ஆண்டு முதல் பெற்று வந்த நல்ல பெயரை கெடுத்து விட்டீர்கள். சம்பந்தமே இல்லாதவர்களை தூண்டிவிட்டு பள்ளி வாகனங்கள், படிப்பதற்கான உபகரணங்கள், மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான சான்றிதழ்களை எரித்து வன்முறையை நிகழ்த்தியுள்ளார்கள். 


இவை அனைத்திற்கும் ஸ்ரீமதியின் அம்மா தான் முழுக்க முழுக்க பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும். வன்முறையால் 3500 குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஸ்ரீமதியின் அம்மா சொன்னது எல்லாம் தவறான தகவல்கள்..மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்றால் அவரின் செல்போனையும், ஸ்ரீமதியின் செல்போன் எண்ணையும் சோதனை செய்தால் கிடைக்கும். பள்ளிக்கும் மாணவி மரணத்திற்கும்  எந்த சம்பந்தமும் இல்லை என தெரிந்து கொள்ளலாம் என சாந்தி தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண