பொன்னமராவதியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டேவிற்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். 


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சிகப்பி. இவரது கணவர் ஆறுமுகம் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். இதனால் இன்ஜினியராக உள்ள தன் மகன் பழனியப்பனுடன் வசித்து வந்தார். இதனிடையே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடந்தாண்டு டிசம்பர் 23 ஆம் தேதி இருவரையும் கொன்றனர். மேலும் அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.


இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படையினரை அமைத்து புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இரண்டு பேரையும் கொலை செய்தது யார்?   முன்விரோதமா காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது குடும்பப் பிரச்சனையா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.


அதேசமயம் அப்பகுதியில் சிகப்பி மற்றும் பழனியப்பன் ஆகியோருக்கு இரண்டு வீடுகள் உள்ள நிலையில் இரண்டு வீடுகளும் திறந்து கிடந்துள்ளது. அதனால், இருவரையும் தெரிந்த யாரோதான் இந்த கொலையை செய்திருக்கக் கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது. ஆனால் 4 மாதங்கள் கடந்த நிலையில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் குற்றவாளிகள் யார் என்பது தெரிய வந்தது. 


அதாவது  இவ்வழக்கு சம்பந்தமாக பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபால் விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது இடைய புதூர் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகம்படும்படியாக  இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், ஒருவர் சிங்கம்புணரியைச் சேர்ந்த சக்தி என்பதும், மற்றொருவர் தேவக்கோட்டையைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பதும் தெரியவந்தது. இவர்களுக்கு  சிகப்பி மற்றும் பழனியப்பன் கொலையில் இருவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதில் சக்தி பழனியப்பனிடம் கொத்தனாராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. 


இதனையடுத்து இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி  குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசாரை வந்திதா பாண்டே ஐபிஎஸ் நேரில் வரவழைத்து வெகுமதிகள் வழங்கி பாராட்டியிருந்தார். இந்நிலையில் பொன்னமராவதியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பண்டேவிற்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.