விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகிலுள்ள மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது ,அப்போது அதே ஊரை சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் சிலர் கோயிலுக்குள் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் (வன்னியர்) பட்டியலின இளைஞர்கள், பெண்களை தாக்கியுள்ளனர்.


இது குறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள வளவனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினரிடனும் மாவட்ட நிர்வாகத்தினர் 7 முறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், ஆதிக்க சமூக தரப்பினர் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து இரண்டு முறை சமாதானம் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் (24-05-23) இரண்டாவது முறையாக இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பழனி தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்கானிப்பாளார் பொறுப்பு மோகன்ராஜ், விழுப்புரம் வட்டாச்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தையில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஆதிக்க சமூக தரப்பினர் சம்மதம் தெரிவித்தனர். பின்னர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் ஆகியோர் தலைமையில் அனைத்து கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் 11 கட்சிகளை சேர்ந்த பிரிதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக வருகின்ற 5-ஆம் தேதி அனைத்து கட்சி பிரிதிநிதிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கவும், நடவடிக்கை இல்லை என்றால் மாநில அளவில் அரசியல் கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.


இந்தநிலையில் மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இரு தரப்பினரையும் 7 முறைக்கு மேல் அழைத்து ஆட்சியர் பழனி பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டாததால் ஆட்சியர் பழனியின் உத்தரவின் பேரில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 145 (1) இன் கீழ் விழுப்புரம் கோட்டாட்சியர் அவர்கள் முதல்நிலை உத்தரவைப் பிறப்பித்து மேல்பாதி அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலின் வாயிலைப் பூட்டி சீல் வைத்துள்ளனர் அதிகாரிகள்.