ஆன்லைன் ரம்மி விளையாட்டால் யாரேனும் தற்கொலை செய்து கொண்டால் ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான  ஜவாஹிருல்லா தெரிவித்தார்.


ஆன்லைன் ரம்மி சூதாட்டத் தடுப்புச் சட்டம் தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, டிசம்பர் 1ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.


காங்கிரஸ் எதிர்ப்பு
"ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா ஒருபோதும் தமிழக ஆளுநரை மன்னிக்காது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் தராத, தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாத ஆளுநர் தமிழகத்திற்கு தேவையா. அவரை குடியரசுத் தலைவர் உடனே திரும்பப் பெற வேண்டும்" என்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.


ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து விதமான பதில்களையும் ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், ”ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கான நோக்கம் மசோதாவின் முகப்புரையிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி, நோய் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நோயை ஒழிக்கவே பாடுபட்டு வருகிறோம். 


ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தவுடன் சட்டம் நடைமுறைக்கு வரும். 95% மக்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து விதமான பதில்களையும் ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. ஆனால் ஒப்புதல் தாமதப்படுத்தியதற்கான காரணம் ஆளுநருக்குத்தான் தெரியும்” என தெரிவித்துள்ளார்.


முன்னதாக, இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:


தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒடிஸா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில்  இது நான்காவது தற்கொலை ஆகும்.


Viral Video: கூகுள் மேப்பை பார்த்து ஓட்டிய ஓட்டுநர்; கழிவு நீர் வாய்க்காலில் இறங்கிய கார் - வைரல் வீடியோ


தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது.  15 மாதங்களில் விலைமதிப்பற்ற  33  உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை! ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது


ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணர வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.