அணைகள் பாதுகாப்பு மசோதா காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசால் கடந்த 2010ஆம் ஆண்டு கொண்டு வரப்பட இருந்தது. அது பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்த வரைவு மசோதாவில் ஒரு மாநிலத்திலுள்ள அணைகளை பார்வையிடவும், தகவல்களை பகுப்பாய்வு செய்யவும், அணைகளின் பாதுகாப்பு குறித்த அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்று அணைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் அந்த மாநில அணைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு மட்டுமே உரிமையுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த வரைவு மசோதாவில் எந்த மாநிலங்கள் அணைகள் பாதுகாப்பு குறித்த சட்டம் மக்களவையில் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனவோ அந்த மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்து வகையில் சட்டம் இயற்றப்படும் என கூறப்பட்டது.



முல்லை பெரியாறு அணை


இந்த சட்ட முன் வரைவுக்கு அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து 29-07-2011ல் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார். அப்படியான ஒரு எதிர்ப்பை ஜெயலலிதா பதிவு செய்யக் காரணம், நமக்கு சொந்தமாக கேரள எல்லைக்குள் இருக்கும் முல்லைபெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகளின் பாதுகாப்பு, இயக்கம், பராமரிப்பு இவை அனைத்தும் கேரள அரசின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காகதான். எனவே, அந்த வரைவு மசோதாவில் அணைகள் எந்த மாநிலத்திற்கு சொந்தமோ (வேறு மாநில எல்லைக்குள் இருந்தாலும்) அந்த மாநில அணை பாதுகாப்பு அமைப்புக்கு மட்டுமே அணைக்கான ஒட்டுமொத்த அதிகாரமும் வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளவும் ஜெயலலிதா வலியுறுத்தினார்.


பின்னர், 2016ஆம் ஆண்டு அணைகள் பாதுகாப்பு மசோதாவை கொண்டுவர நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு முயன்றது. அப்போதும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 11-09-2016ல் பிரதமர் நரேந்திரமோடிக்கு இன்னொரு கடிதம் எழுதினார். அதில், 2010ஆண்டு அணைகள் பாதுகாப்பு வரைவு மசோதாவில் தமிழகம் சுட்டிக்காட்டிய குறைவுகள் எதுவும் நிவர்த்திசெய்யப்படவில்லை என்பதுடன் அந்த வரைவு மசோதா தேவையற்றது, மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல், அரசியல் சட்டத்திற்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என்பதை பல்வேறு காரணங்களுடன் விளக்கியிருந்தார். ஆனால், அவை எதையும் கருத்தில் கொள்ளாமல் கடந்த 2019ஆம் அண்டு அணைகள் பாதுகாப்பு மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. சமிபத்தில் அதே எதிர்ப்புகளுடன் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு பெரும் துரதிருஷ்டம்.



  • 2019ஆம் ஆண்டு அணைகள் பாதுகாப்பு மசோதாவின் உள்ளடக்கம் என்ன ?


இந்த மசோதா 36 பக்கங்களை கொண்டது. மசோதா சட்டமானால் ஒன்றிய அரசின் கீழ் தேதிய அணைகள் பாத்காப்பு ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையத்தின் பனிகள் அட்டவணை 2ல் விளக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக ஒன்றிய அரசில் பணியாற்றும் கூடுதல் செயலாளர் அந்தஸ்திற்கு குறையாத ஒருவர் நியமிக்கப்படுவார். இவர் ஒன்றிய அரசின் கட்டளைகளை நிறைவேற்ற கடமைப்பட்டவர். (காண்க : மசோதாவின் அத்தியாயம் 3-ல் பிரிவு 4). ஆணையத்தின் பணிகள் 32 என பட்டியலிடப்பட்டுள்ளது.


இந்த 32 பணிகளில் பல பணிகள் ஏற்கனவே மத்திய நீர்வளக்குழுமத்தின் அறிவுரைப்படி தமிழகத்தில் தற்போதுள்ள அணைகள் பாதுகாப்பு இயக்ககம் செய்து வரும் பணிகளே. அதை செய்ய இன்னொரு ஆணையம் என்பது தேவையற்றது. முழுவதையும் படித்தால் இந்த ஆணையத்திற்கு மாநிலங்களின் அதிகாரத்தை மீறும் மேலதிக அதிகாரம் இருப்பதும் புலப்படும்.


மசோதாவின்படி தேசிய அணைகள் பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்படும். மத்திய நீர் வளக்குழுமத்தின் தலைவர் இந்த குழுவின் தலைவராக இருப்பார். இதன் உறுப்பினர்கள், ஒன்றிய அரசில் பணியாற்றும் இணைசெயலர் நிலையில் உள்ளவர்களாக இருப்பார்கள். அத்துடன், ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் மாநில அரசில் பணியாற்றும் முதன்மைத் தலைமை பொறியாளர் நிலையில் 7 பேர் இருப்பர். ஆக, உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது 17. ஏதேனும் ஒரு முக்கிய முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால், அந்த முடிவு பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின்படியே அமையும். அதற்காகதான் ஒன்றிய அரசுக மாநில அரசுக்கும் சமமான பிரதிநித்துவம் அளிக்காமல் விட்டிருக்கிறது. இந்த உறுப்பினர்கலில் 3 நிபுணத்துவ உறுப்பினர்கள் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவார்கள். இவர்கள், அணைகள் பாதுகாப்பு குறித்த நிபுணர்களாக இருப்பர். அதன்படி பார்த்தால், ஒன்றிய பாதுகாப்பு அணைகள் பாதுகாப்பு குழுவில், ஒன்றிய அரசின் 13 உறுப்பினர்களும் மாநில அரசில் இருந்து 7 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் இப்படி நியமிக்கப்பட்டால் எல்லா முடிவுகளும் ஒன்றிய அரசின் விருப்பத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்படும் என்பது புலப்படும்.



  • மாநில அளவிலான அணைகள் பாதுகாப்பு குழு


இந்த குழுவில் மாநில அரசின் கீழ் பணியாற்றும் அந்த மாநில முதன்மை தலைமை பொறியாளர் தலைவராக இருப்பார். அறிவியல், தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றும் மாநில அரசு பணியின் தலைமை பொறியாளர் மட்டத்தில் உள்ள 6 பேர் நியமிக்கப்படுவார்கள். மேலும், ஒரு மாநில அணைகள் மேற்புறத்திலுள்ள மாநிலத்தில் அமைந்திருந்தால், மேற்புற மாநிலத்திலிருந்து தலைமை பொறியாளர் மட்டத்தில் உள்ளவர்களும் இந்த குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்படவேண்டும். கீழ்புற மாநிலத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் சேர்க்கப்படுவார்.


அதன்படி பார்த்தால், தமிழக அணைகள் பாதுகாப்பு குழுவில் கேரள மாநிலத்திலிருந்து ஒருவரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒருவரும் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும். மேலும் மத்திய நீர்வளக்குழுமத்திலிருந்தும் இயக்குநர் அந்தஸ்தில் ஒருவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவார். மேலும் நீரியல், அணைகள் வடிவமைப்பியலில் நிபுணத்துவம் வாய்ந்த 3 பேர் பொறியியல் நிறுவனங்களில் இருந்து நியமிக்கப்படுவர். மைய மின்சார ஆணையத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் இருப்பர். இப்படி பார்த்தால் தமிழக அணைகள் பாதுகாப்பு குழுவில், ஆந்திரா, புதுச்சேரியை கழித்து கூட 14 உறுப்பினர்கள் இருப்பர். அதில் 6 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பர். 16 பேரில் வெறும் 6 என்பது பெரும்பான்மையில்லையே ; என்ன செய்ய முடியும் நம்மால் ?



  • மாநில அணைகள் பாதுகாப்பு அமைப்பு


30 அணைகளுக்கு மேல் உள்ள மாநிலங்களில் தலைமை பொறியாளர் மட்டத்திலு ஒருவர் தலைமை ஏற்பார். அவருக்கு கீழ், அணைகள் பாதுகாப்பு, அணை வடிவமைப்பு, நீர் இயந்திர பொறியியல், நீரியல் ஆகிய துறை நிபுணர்கள் பணியாற்ற வேண்டும். இந்த குழுவுக்கு தரப்படும் களப்பணிகள் அதிகம். ஆனால், ஒன்றீய அரசின் கீழ் வரும் அணைகள் பாதுகாப்பு ஆணையம், அணைகள் பாதுகாப்பு குழு இவற்றிற்கு மேற்பார்வையிடும் போக்கிலான பணிகளே உள்ளன.


தமிழகத்தின் உரிமைகள் பறிக்கபப்டும்



  1. அணைகள் பாதுகாப்பு மசோதா 2019, ஒன்றிய அரசை அணைகள் பாதுகாப்புக்கான அதிகார குவியலுக்கு உரிமையாக்குகிறது.



  1. மாநில அரசுகளுக்கு சொந்தமான உள்மாநிலத்திலும் வெளி மாநிலத்திலும் உள்ள அணைகள் மீதான உரிமை, அதிகாரம் அறவே பறிக்கப்படும் நிலையை இந்த மசோதா ஏற்படுத்தும்



  1. அணைகளை பார்வையிடுதல், அவற்றின் பாதுகாப்பை ஆய்வு செய்தல், அணைகளை இயக்கி பராமரித்தல் போன்ற செயல்களில் ஒன்றிய அரசின் கீழ் வரும் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவிற்கு உச்சப்பட்ச அதிகாரத்தை இந்த மசோதா வழங்குகிறது.



  1. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கிவருவதைபோல, அணைகளையும் வருங்காலத்தில் தனியார் மயமாக்குவற்கான முன்னோட்டம்தான் இந்த மசோதா என்ற ஐயம் ஏற்படுகிறது.



  1. நமக்கு சொந்தமாக அண்டை மாநிலங்களில் உள்ள அணைகளின் கட்டுப்பாடு நம்மை விட்டு நழுவிச் செல்ல இருக்கிறது.



  1. அண்டை மாநிலங்களுடனான நீர்த்தகராறுகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை குழுவின் உத்தரவுகளையும் மதிக்காத அரசுகளை கட்டுப்படுத்த இந்த மசோதாவில் வழிவகை செய்யப்படவில்லை.



  1. அணைகள் பாதுகாப்பை காரணம் காட்டி ஒன்றிய அரசு தனக்கு சாகதமாகன் முடிவை எடுக்கும் நிலைக்கு ஏதுவாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.



  1. தமிழகத்தில் மத்திய நீர்வளக்குழுவின் அறிவுரைகளை ஏற்று, அணைகள் திறம்பட பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மசோதா தேவையற்றது



  1. இந்த மசோதா, மாநில அரசுகளின் அதிகாரங்களை பறித்து அவற்றை ஒடுக்கும் முயற்சி



  1. இந்த மசோதா, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும், இந்திய இறையாண்மைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாகவும் உள்ளது.


 


         கட்டுரையாளர் : திரு. சோ.திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி


        தொடர்புக்கு - 9841405765