தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது.


தமிழகத்தில் வழக்கத்துக்கு மாறாக மே மாதம் அதிகளவில் மழை பெய்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் மே மாதத்தில் புயல் சின்னம் உருவானதே இதன் காரணம்.


வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் மோக்கா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்தப் புயலானது, நாளை வங்காள தேசம் - வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது.


இந்நிலையில், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது.


புயல் எங்கே மையம் கொண்டுள்ளது?


தென்கிழக்கு மத்திய வங்கக் கடலில் கடந்த 06 மணி நேரத்தில் 09 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்த தீவிர  சூறாவளி புயல் "மோக்கா"  கடந்த 06 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று இன்று காலை 05.30 மணி அளவில் மத்திய தென்கிழக்கு வங்கக்கடலில் அட்சரேகை (longitude) 13.2°N மற்றும் தீர்க்கரேகை (latitude) 88.1°E பகுதியில் மையம் கொண்டுள்ளது. அதாவது போர்ட் பிளேயருக்கு மேற்கு-வடமேற்கில் சுமார் 520 கிமீ தொலைவிலும், காக்ஸ் பஜாருக்கு 1010 கிமீ தென்-தென்மேற்கே (வங்காளதேசம்) தொலைவில், சிட்வேவிற்கு (மியான்மர்) 930 கி.மீ.  தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.


இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து கிழக்கு மத்திய வங்கக் கடலில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இது தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளை காக்ஸ் பஜார் (வங்காளதேசம்) மற்றும் கியாக்பியு (மியான்மர்) இடையே மே 14 ஆம் தேதி நண்பகல் சிட்வே (மியான்மர்) க்கு அருகில் அதி தீவிர சூறாவளி புயலாகக் கடக்கக்கூடும், புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 150- 160 கிமீ வேகத்தில் அவ்வப்போது 175 கிமீ வேகத்தில் காற்று  வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


அந்தமான் கடல் பகுதிகள்:  12.05.2023 :  சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும்   வீசக்கூடும்.


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 12.05.2023 மாலை வரை : காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13.05.2023 அன்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 12.05.2023 காலை முதல் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135  கிலோ மீட்டர் வேகத்திலும்,  13.05.2023 காலை முதல் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 155  கிலோ மீட்டர் வேகத்திலும்,  13.05.2023 மாலை முதல் 14.05.2023  காலை வரை மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.