‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கான வங்கி விவரங்களையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக தமிழ்நாடு முதலமைச்சரும், அமைச்சர்களும், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடவுள்ளார்கள்.


இந்தச் சூழ்நிலையில், நல்லுள்ளம் கொண்ட பல்வேறு தொழில் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், பொது மக்களும் இந்த மாபெரும் பணிக்கு தங்களது பங்களிப்பினையும் வழங்கிட விருப்பம் தெரிவித்து, அரசைத் தொடர்புகொண்டு வருகிறார்கள். எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும், புதிய வாழ்வாதாரங்களை மீள உருவாக்கிடவும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வாயிலாக, மிக்ஜாம் மீட்புப் பணிகளுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.


100% வரிவிலக்கு


இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(G)-ன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50ஜி-ன்கீழ் விலக்களிக்கப்படும்.


இந்த நன்கொடைகளை மின்னணு முறை மூலம் பின்வருமாறு வழங்கலாம்.


(1) வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி பற்றுச் சீட்டினைப் (Receipt) பெற்றுக்கொள்ளலாம்.


https://cmprf.tn.gov.in


(2) Electronic Clearing System (ECS) / RTGS / NEFT மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.


வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி


கிளை - தலைமைச் செயலகம்,


சென்னை - 600 009


2. சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070


IFS Code - IOBA0001172


MICR Code - 600020061


CMPRF PAN - AAAGC0038F


(3) UPI - VPA ID: tncmprf@iob மற்றும் PhonePe, Google Pay, PayTM, Amazon Pay, Mobikwik போன்ற பல்வேறு செயலிகள்.


(4) மேற்கண்ட ECS மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டினைப் பெற ஏதுவாக கீழ்க்கண்ட தகவல்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


பெயர் செலுத்தும் தொகை


வங்கி மற்றும் கிளை செலுத்தப்பட்ட தேதி


நிதி அனுப்பியதற்கான எண்


தங்களது முழுமையான முகவரி


இ-மெயில் விவரம் தொலைபேசி /அலைபேசி எண்


(5) நிவாரண நிதி வழங்கும் வெளிநாடுவாழ் மக்கள் கீழ்க்கண்ட SWIFT Code-ஐப் பின்பற்றிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


IOBAINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai.


(6) மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக,“முதலமைச்சரின் பொது நிவாரண நிதி (Chief Minister’s Public Relief Fund)” என்ற பெயரில், கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:


அரசு இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,


முதலமைச்சர் பொது நிவாரண நிதி,


நிதித்துறை, தமிழ்நாடு அரசு,


தலைமைச் செயலகம்,


சென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா.


மின்னஞ்சல் முகவரி: jscmprf@tn.gov.in


மேற்கூறிய முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் தவிர, நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility)-ன்கீழ் பேரிடர் நிவாரணத்திற்காக நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள், மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைப்பின் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.


வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி


கிளை - தலைமைச் செயலகம்,


சென்னை - 600 009


சேமிப்புக் கணக்கு எண் - 117201000017908


IFSC Code - IOBA0001172


இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.