Cyber Crime : ஜி-பே மூலம் நூதன முறையில் மக்களிடம் மோசடி நடைபெறுவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஆதிகாலம் முதல் அதிநவீனம் எனப்படும் ஸ்மார்ட் உலகம் வரை திருட்டு என்பது மட்டும் அழியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏதாவது ஒரு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வழியிலேயே பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரகேற்றி வருகின்றனர். தொழில் நுட்ப காலத்திற்கு ஏற்ப தற்போது திருடர்களும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடி வருகின்றனர்.


ஜி-பே மூலம் மோசடி


பல விதமான மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஜி-பே மூலம் மோசடி நடைபெற்று வருவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது GooglePay-க்கு பணத்தை அனுப்புகிறார். மேலும் பணத்தை  உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் இருந்ததாக உங்களுக்குத் தெரிவிக்க உங்களை அழைக்கிறார். அதனை தொடர்ந்து, பணத்தை அவர்களின் எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும்.


எனவே, யாராவது உங்கள் கணக்கில் தவறாகப் பணம் பெற்றிருந்தால், அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இந்த மோசடி இப்போதுதான் தொடங்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது. மேலும் பொதுமக்கள் கவனத்தோடு கையாள வேண்டும்” என்று தமிழ்நாடு காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.


நினைவில் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள்



  • உங்கள் யுபிஐ பின்னை ஒருபோதும் தெரியாதவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது.

  • தெரியாத ஐடிக்களில் வரும் மின்னஞ்சல்கள் மற்றும் லிங்குகளை திறக்க வேண்டாம்.

  • உங்கள் விவரங்களை உங்கள் வங்கியுடன் இணைக்க வேண்டும்.

  • நீங்கள் நம்பும் பாதுகாப்பான வைஃபை இணைப்புகளை மட்டும் பயன்படுத்துங்கள்

  • உங்கள் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கணக்கு அறிக்கைகளை கண்காணித்து, உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரிய நடத்தை ஏதேனும் உள்ளதா எனக் கண்காணிக்கவும்.

  • அப்படி ஏதாவது அசாதாரணமான பரிவர்த்தனையைக் கண்டால் உடனடியாக வங்கி அல்லது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.




மேலும் படிக்க


Delhi murder case: ஷ்ரத்தா ரத்தக்கறையை அப்தாப் சுத்தம் செய்தது எப்படி? அதிர்ச்சி தகவல் தந்த டெல்லி போலீஸ்..!